Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

பீகாரில் சட்டப் பேரவை தேர்தல்; 121 தொகுதிகளில் நாளை முதல் கட்ட வாக்குப்பதிவு: அசம்பாவிதங்களை தடுக்க துணை ராணுவம் குவிப்பு

பாட்னா: பீகார் சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு, உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நாளை நடைபெறுகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் இரண்டாம் கட்டமாக நடக்கும் தொகுதிகளில் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர்.

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான அனல் பறந்த பிரசாரம் நேற்று (நவ. 4) மாலை 6 மணியுடன் ஓய்வுக்கு வந்தது. பிரதமர் மோடி, எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் கார்கே, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் ெபாதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் இறுதிக்கட்டமாக சூறாவளிப் பிரசாரத்தில் ஈடுபட்டனர். பிரசாரத்தின் கடைசி நாளான நேற்று சமஸ்திபூரில் ஆளும் ஐக்கிய ஜனதா தள தொண்டர் ஒருவர் கொலை செய்யப்பட்டது, மொகாமா தொகுதி சுயேச்சை வேட்பாளரான அனந்த் சிங் கைது செய்யப்பட்டது போன்ற சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. மாநிலம் முழுவதும் தேர்தல் ஆணையம் நடத்திய அதிரடி சோதனைகளில் கணக்கில் வராத ரொக்கம், மதுபானங்கள் மற்றும் போதைப்பொருட்கள் என சுமார் ரூ.108 கோடி மதிப்பிலானவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நேபாள எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஊடுருவலைத் தடுக்க எல்லைகள் மூடப்பட்டு, 500க்கும் மேற்பட்ட மத்திய பாதுகாப்புப் படை கம்பெனிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு நடைபெறும் அனைத்து வாக்குச்சாவடிகளும் இணையதளம் மூலம் நேரடியாக கண்காணிக்கப்படுகின்றன. இந்த முதல் கட்டத் தேர்தலில், 18 மாவட்டங்களில் உள்ள 121 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நாளை (நவ. 6) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக 38,472 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்தலில் 2.3 கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய உள்ளனர். இவர்களில் 1.2 கோடி பேர் பெண்கள் மற்றும் 1,200 பேர் மூன்றாம் பாலினத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக 1,314 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலத்தை இந்தத் தேர்தல் தீர்மானிக்க உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், நக்சல் அச்சுறுத்தல் உள்ள சில பகுதிகளில் மட்டும் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் ராகோபூர் தொகுதியில் போட்டியிடும் தேஜஸ்வி யாதவ், பாஜக சார்பில் தாராபூர் தொகுதியில் களமிறங்கியுள்ள துணை முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி, அலிநகர் தொகுதியில் போட்டியிடும் பிரபல பாடகி மைதிலி தாக்கூர், மொகாமா தொகுதியில் போட்டியிடும் முன்னாள் எம்.எல்.ஏ அனந்த் சிங்கின் மனைவி நீலம் தேவி ஆகியோர் இந்தத் தேர்தலில் முக்கிய வேட்பாளர்களாகக் கருதப்படுகிறார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணி, முதல்வர் நிதிஷ் குமாரின் நலத்திட்டங்களையும், மோடியின் உத்தரவாதத்தையும் நம்பி களமிறங்கியுள்ளது. மறுபுறம், ‘இந்தியா’ கூட்டணி 10 லட்சம் வேலைவாய்ப்புகள் என்ற வாக்குறுதியை முன்வைத்து தீவிரமாகப் போராடி வருகிறது.

ஐந்தாவது முறையாக முதல்வர் பதவியைக் கைப்பற்றும் முனைப்பில் நிதிஷ் குமாரும், ஆட்சியைப் பிடிக்கும் நம்பிக்கையில் தேஜஸ்வி யாதவும் உள்ளதால், இந்தத் தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 58 சதவீதத்திற்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த முதல் கட்டத் தேர்தலின் முடிவுகள் பீகாரின் அடுத்த ஐந்தாண்டு கால அரசியல் அத்தியாயத்தை எழுதும் தொடக்கமாக அமையும். இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் 122 தொகுதிகளில் இன்று மீண்டும் தொடங்க உள்ள நிலையில், வரும் 11ம் தேதி இந்த தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து வரும் 14ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.