புதுடெல்லி: நூற்றாண்டுக்கு ஒருமுறை கிடைக்கக் கூடிய ஆளுமை மகாகவி பாரதியார் என புகழ்ந்த பிரதமர் மோடி, அவரது சிந்தனைகள் இன்றும் மக்களுக்கு ஊக்கமளிப்பதாக கூறினார்.மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 143வது பிறந்தநாள் விழா நாடு முழுவதிலும் நேற்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாரதியின் முழுமையான படைப்பு நூல்களின் தொகுப்பை பிரதமர் மோடி டெல்லியில் நேற்று வெளியிட்டார்.
இந்நூல்களை சீனி விஸ்வநாதன் தொகுத்துள்ளார். அலையன்ஸ் நிறுவனம் இதனை வெளியிட்டுள்ளது. இவ்விழாவில் கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவாத், நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி ‘‘மாபெரும் கவிஞர் சுப்பிரமணிய பாரதியாரை பயபக்தியுடன் வணங்குகிறேன், அவரது மரபுக்கு எனது இதயப்பூர்வமான அஞ்சலியை செலுத்துகிறேன். அவரது கருத்துக்கள் எண்ணற்ற மக்களிடையே தேசபக்தி, புரட்சியின் தீப்பிழம்புகளை பற்றவைத்தன.
பாரதியார் தமிழ்நாட்டின், தமிழ் மொழியின் பாரம்பரியம் மட்டுமல்ல, அவர் தனது ஒவ்வொரு மூச்சையும் இந்திய அன்னையின் சேவைக்காக அர்ப்பணித்த சிந்தனையாளர். பாரதியார் போன்ற ஆளுமை நூற்றாண்டுக்கு ஒருமுறை கிடைக்கக்கூடியது. அவருடைய சிந்தனைகளும், அறிவார்ந்த ஆற்றலும் இன்றும் மக்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கிறது’’ என்றார்.