சென்னை: பாரத தேசம் என்று அழைத்தால் நான் மிக்க மகிழ்ச்சி அடைவேன் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். ஜி20 மாநாடு நடப்பதையொட்டி, டெல்லி முழுவதும் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டையொட்டி டெல்லி அரசின் அனைத்து துறைகளும் தீவிரமாக களமிறக்கப்பட்டு உள்ளன. மேலும் இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஜி.20 மாநாட்டில் பங்கேற்க வருகை தர உள்ள விருந்தினர்களுக்கு குடியரசுத்தலைவர் மாளிகையில் பிரம்மாண்ட விருந்தளிக்கப்பட இருக்கிறது.
இந்த விருந்தில் பங்கேற்க வரும் விருந்தினர்களுக்காக குடியரசுத்தலைவர் மாளிகை சார்பில் அனுப்பப்பட்டுள்ள அழைப்பிதழில், பாரத குடியரசுத்தலைவர் என குறிப்பிடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது;
பாரத தேசம் என்று அழைத்தால் நான் மிக்க மகிழ்ச்சி அடைவேன். பாரத தேசம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஏனென்றால் நம் நாட்டின் பெருமை. முதலில் பாரத தேசம் என்று தான் நாம் அழைத்துக்கொண்டிருந்தோம். நமது பிரதமர் மோடி ஆங்கிலேயர்களின் தாக்கம் எங்கு எல்லாம் இருக்கிறதோ அதில் இருந்து எல்லாம் விடுபட வேண்டும். பாரத தேசம் என்று தோள்கொட்டுவோம் என்று தானே பாரதியார் கூறியிருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.