பெங்களூரு: பெங்களூருவில் ராஜனு குண்டே அருகே ஆப்பிரிக்க பெண் ஒருவர் போதை பொருள் விற்பனை செய்வதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினர். இதில், ஆப்பிரிக்க பெண் அகின்வுமி பிரின்சஸ் (25) எம்டிஎம்ஏ எனப்படும் போதை பொருளை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது வீட்டில் சோதனை நடத்தி 5.32 கிலோ எம்டிஎம்ஏ போதைப் பொருள்களை கைப்பற்றினர்.
அவரை கைது செய்து, விசாரித்ததில் நைஜீரியா நாட்டை சேர்ந்தவர் என்பதும், 2022ம் ஆண்டு படிப்பதற்காக தெலங்கானா வந்ததும் அங்கிருந்து பெங்களூரு வந்து போதைப் பொருள் விற்றுள்ளார் என்பது தெரியவந்தது. அவரிடம் கைப்பற்றப்பட்ட எம்டிஎம்ஏ போதைப்பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.10 கோடி என போலீசார் தெரிவித்தனர். அவர் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.