Friday, June 13, 2025
Home மருத்துவம்ஆரோக்கியவாழ்விற்குகீரைகள் குப்பைமேனி கீரையின் பயன்கள்!

குப்பைமேனி கீரையின் பயன்கள்!

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா

தமிழ்நாட்டு பாரம்பரிய மூலிகை மருத்துவத்தில் முக்கிய இடத்தை பிடித்த ஒரு பொதுவான கீரை குப்பைமேனி கீரை. இதன் தாவரவியல் பெயர் அகாலிபா இன்டிகா. யூபோர்பேசியே என்ற தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இந்தக் கீரை தேவையற்ற களைச்செடியைப் போன்று பல்வேறு இடங்களில் மிகச்சாதாரணமாக கிடைக்கப்பெறும் கீரையாகும். இந்தக் கீரையை பாரம்பரிய முறையில் பல்வேறு நோய்களை குணப்படுத்த பயன்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக சளி, காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறு போன்ற பிரச்னைகளுக்கு குப்பைமேனி இலைச்சாற்றினை தேனுடன் கலந்து பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. குப்பைமேனி கீரை இந்தியா, இலங்கை, ஆப்பிரிக்கா மற்றும் தென்னாசிய நாடுகளில் பரவலாக காணப்படுகிறது. சிறிது ஈரமான நிலப்பகுதிகளிலும் காடுகளிலும் வளரக்கூடியது.

குப்பைமேனி கீரையில் உள்ள ஊட்டச்சத்துகள்

குப்பைமேனி கீரையில் உடலுக்கு தேவையான தாதுக்களான இரும்பு, கால்சியம், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் அதிக அளவில் உள்ளன. மேலும், செரிமானத்திற்கு தேவையான நார்ச்சத்துக்களையும் குப்பைமேனி கொண்டுள்ளது. மேலும் இதில், வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ உள்ளன. இவையனைத்தும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

குப்பைமேனியின் மருத்துவ குணங்களுக்கு மிகவும் முக்கிய பங்கினை அளிக்கும் மூலக்கூறுகளாக அல்கலாய்டுகள், பிளேவோனாய்டுகள், டானின்கள், ஸ்டீராய்டுகள், சாபோனின்கள் மற்றும் பீனாலிக் மூலக்கூறுகள் திகழ்கின்றன.

குப்பைமேனியின் மருத்துவ குணங்கள்:

குப்பைமேனி உடலுக்குள் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றி ரத்தத்தை சுத்தப்படுத்த பெரிதும் உதவுகிறது. இதனால் சருமம் சார்ந்த நோய்கள், கண்பார்வை, முடி வளர்ச்சி உள்ளிட்டவை சீராக வாய்ப்புகள் அதிகம்.உடலில் ஏற்படும் எந்தவொரு அழற்சியையும் குறைக்கும் திறன் கொண்டது. சளி, காய்ச்சல், மூட்டுவலி, வீக்கம் மற்றும் எரிச்சல் ஆகியவற்றை குறைக்க குப்பைமேனி உதவுகிறது.

பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளின் தொற்றுக்கு எதிராக செயல்படும் தன்மையுடையது.குடலில் உள்ள புழுக்களை அழிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. பசி அதிகமாக இருக்கும் நேரத்தில் இதன் இலைச்சாற்றினை குடிப்பதினால் குடல் புழுக்கள் முழுவதும் நீக்கி, குடல் சுத்தமாக்கக்கூடும்.

சிறுநீரக கற்கள், சிறுநீர்ப் பிடிப்பு போன்ற பிரச்னைகளுக்கு பயன்படுகிறது.மூட்டுவலி, பல்வலி, தசைவலி, மூட்டு வீக்கம் அழற்சி போன்றவற்றுக்கு நல்ல மருந்தாக செயல்படுகிறது.
வெட்டுப்புண், தழும்பு ஆகியவற்றை குணப்படுத்தவும் பயன்படுகிறது. சொரியாசிஸ், பித்தப்புண்கள், எக்சிமா போன்ற பிரச்னைகளுக்கும் குப்பைமேனி ஒரு நல்ல தீர்வாக திகழ்கிறது.
கல்லீரல் பாதுகாப்பை உறுதி செய்யவும், மூச்சுக்கோளாறு, ஆஸ்துமா போன்ற பிரச்னைகளுக்கு தீர்வாகவும் குப்பைமேனி செயல்படுகிறது.

இவ்வாறு குப்பைமேனி என்பது வெறும் கீரை அல்ல, மருத்துவ குணங்கள் நிறைந்த மரபுக்கண்மணியான மூலிகை. ஆனால் பயன்படுத்தும் முறை மற்றும் மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக் கொள்வது நலம். மேலும், இது இயற்கையில் கிடைக்கும் மருத்துவ கம்பி. உடலை உள்ளுக்குள் சுத்திகரித்து நம்மை காக்கும் ஓர் அற்புத மூலிகையாகும்.

குப்பைமேனி எண்ணெய் தயாரிக்கும் முறை

குப்பைமேனி இலைகளை எடுத்து நன்றாக அரைக்கவும். அதிலிருந்து கிடைக்கும் சாற்றை எடுத்து அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும். குப்பைமேனியின் ஈரத்தன்மை மறைந்து எண்ணெய் நன்கு காய்ந்ததும் டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ளலாம்.

இந்த எண்ணெயைத் தோல் நோய்களுக்குத் தடவலாம். கண்ணுக்குத் தெரியாத பூச்சிகளால் உடலில் ஏற்படும் அரிப்பு, தடிப்புகளுக்கு குப்பைமேனி எண்ணெய் நன்மருந்து. கண்களுக்குத் தெரியாத சிறுசிறு பூச்சியினங்கள் கடிப்பதால் ஏற்படும் குறிகுணங்களை `காணாக்கடி’ என்று அழைப்பது வழக்கம். புண்களில் தடவும் பூச்சு மருந்தாகவும் இந்த எண்ணெய் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

கப நோய்களுக்கு…

கோழையை (சளி) இளக்கி வெளியேற்றும் தன்மை குப்பைமேனிக்கு உண்டு. குப்பைமேனியின் பொடியை 1 கிராம் அளவு வெந்நீரில் கலந்து கொடுக்க, பாடாய்ப்படுத்தும் இருமல் கட்டுப்படும். தலைபாரமாக இருக்கும்போது, குப்பைமேனி இலைகளை அரைத்து நெற்றியில் பற்று போட, உடனடியாகத் தலைபாரம் குறையும்.சளி, இருமலைக் கட்டுப்படுத்த இதன் இலைச்சாறு ஐந்து துளியும், துளசி இலைச்சாறு ஐந்து துளியும் கலந்து கொடுத்தால் போதுமானது. சளியை வாந்தியாக வெளியே தள்ளிவிடும்.

பாடல் குப்பைமேனியின் குணம்
தந்தமூலப் பிணிதீத் தந்திடுபுண்சர்வவிஷ
முந்துகுன்மம் வாத முதிரமூ – லந்தினவு
சூலஞ் சுவாசா தொடர்பீநசங் கபம்போம்
ஞாலங்கொண் மேனியத னால்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi