நன்றி குங்குமம் டாக்டர்
மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய பாக்டீரியாக்களை அழிக்கக்கூடிய ஆற்றல் இளநீருக்கு உண்டு என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றது. மேலும், இளநீர் குடிப்பவர்கள் மிகுந்த உடல் ஆரோக்கியத்தோடு காணப்படுவார்கள் என்றும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆசிய, இலத்தின், அமெரிக்க நாடுகளில் இளநீர் மிகச்சிறந்த குளிர் பானமாக அருந்தப்பட்டு வருகிறது. இதனைப் பாரம்பரிய மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் இளநீரின் மருத்துவ குணங்களை அறிந்து கொள்வோம்.
*இளநீர் வயிற்றுப் போக்கைத் தடுக்கக் கூடியது.
*இளநீர் அடிக்கடி அருந்தி வந்தால், இதயத்திற்கு பலம் சேர்த்து இதய கோளாறுகளை தடுக்கிறது.
*இளநீர் குடிப்பதால் பல நன்மைகள் உள்ளன. சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இளநீரில் சோடியம், கால்சியம், குளுக்கோஸ், புரதம், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.
*இளநீர் உடலுக்கு நீரேற்றம் அளித்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
*இளநீர் செரிமானத்துக்கு உதவுகிறது, ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.
*இளநீர் தோல் மற்றும் முடிக்கு நல்லது, சரும வறட்சி, முடி உதிர்தல் போன்ற பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது.
*இளநீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, கிருமிகளை அழிக்க உதவுகிறது.
*இளநீர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது, இதனால் இதய நோய்கள் வரும் வாய்ப்புகளை குறைக்கிறது.
*இளநீர் உடல் எடையைக் குறைக்கும், கொழுப்பை கரைக்கும்.
சிறுநீரகக் கல்
இளநீர் சிறுநீரக கல் வருதல், கீல்வாதம், அழற்சி போன்றவற்றுக்கு எதிராக செயல்படுகிறது. பேத்தோஜெனிக் பாக்டீரியாக்கள் என்பவை எந்தவித நவீன மருந்துப் பொருட்களாலும் அழிக்க முடியாத தீமை தரும் நுண்ணுயிர்கள் ஆகும். இத்தகைய பாக்டீரியாக்களை அழிப்பதற்கு ஆராய்ச்சியாளர்கள் எப்போதும் புரதத்தையே மூலப் பொருளாகப் பயன்படுத்துவார்கள். இத்தகைய புரதத்தை மலர்கள், இலைகள், வேர்கள், விதைகள் போன்றவற்றிலிருந்து பிரித்தெடுப்பார்கள்.
பொதுவாக கொய்யா பழத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் புரதம் அதிக வீரியம் கொண்டதாக இருக்கும். தற்போது இளநீரில் இருந்தும் இத்தகைய புரதத்தை எடுக்க முடியும் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேற்கு வங்கம் மற்றும் பிரேசிலை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்தப் புதிய ஆராய்ச்சியை கண்டுபிடித்துள்ளனர். எதிர்காலத்தில் சக்தி மிக்க மருந்துகளை தயாரிப்பதற்கும் இளநீர் ஏற்ற மூலப் பொருளாக இருக்கும் என்று கருதுகின்றனர்.
தொகுப்பு: தவநிதி