புவனகிரி: கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த பரங்கிப்பேட்டை, சாமியார்பேட்டை கடற்கரைக்கும், வேலங்கிராயன்பேட்டை கடற்கரைக்கும் இடையே மிதவை ஒன்று நேற்று காலை கரை ஒதுங்கியது. தகவலறிந்து புதுச்சத்திரம் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, மஞ்சள் நிறத்தில் மாலத்தீவு என எழுதப்பட்ட மிகப்பெரிய மிதவை கரை ஒதுங்கி இருந்தது தெரியவந்தது. உடனடியாக வருவாய் துறையினருக்கும், மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து இந்த மிதவை குறித்து விசாரணை நடத்தினர். கரை ஒதுங்கிய மிதவை, கப்பலில் பயன்படுத்தப்படும் போயா என்று அழைக்கப்படும் மிதவை என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. காற்றின் வேகம் மற்றும் அலை காரணமாக இந்த மிதவை கரை ஒதுங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Advertisement


