சென்னை: வங்கக் கடலில் நீடித்து வரும் காற்றழுத்தம் காரணமாகவும், தென்மேற்கு பருவமழை காரணமாகவும் தமிழகத்தில் 25ம் தேதி முதல் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தற்போது வெப்பச் சலன மழை பெய்து கொண்டு இருக்கிறது. அதைத் தொடர்ந்து தென்மேற்கு பருவமழை மற்றும் அதுனுடன் இணைந்த வெப்பச் சலன மழையும் பெய்யும் சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில், அந்தமான் கடல் பகுதியை ஒட்டிய வட கிழக்கு வங்கக் கடல் புதிய காற்று சுழற்சி நீடித்துக் கொண்டு இருக்கிறது.
தற்போது திசை மாறத் தொடங்கியுள்ளது. அரபிக் கடல் பகுதியில் இருந்து தமிழ்நாடு ஊடாக காற்று பயணிக்க உள்ளது. குறிப்பாக 25ம் தேதி முதல் இந்த காற்று கிழக்கு நோக்கி வீசத் தொடங்கும். இதனால் நான்கு நாட்கள் தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். வெயில் அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் வெப்ப சலன மழை இன்று தீவிரமாக பெய்யும் வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடங்கி உள் மாவட்டங்களில் மழை பெய்யும். டெல்டாவிலும் மழை பெய்யும். முன்னிரவில் தொடங்கி நள்ளிரவுக்குள் வட கடலோரப் பகுதியில் மழை பெய்யும். நாளை காற்று குளிர்ந்து இரு காற்று இணைந்து மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.
25ம் தேதி வங்கக் கடலோரம் காற்று சுழற்சி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறிவிடும். 25, 26, 27, 28ம் தேதிகளில் மட்டும் தமிழகத்தில் மழை நீடிக்கும். சில இடங்களில் மிக கனமழை பெய்யும். அதாவது 150மிமீ முதல் 200 மிமீ வரை அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வால்பாறையில் 100 மிமீ வரை இருக்கும். வெப்ப சலன இடி மழை மாலையில் பெய்யும். பொள்ளாச்சி நெகமம் பகுதியில் பெய்யும். கிழக்குப் பகுதியில் வட உள் மாவட்டங்களில் மழை அதிகரிக்கும். 29ம் தேதி மழை குறைந்து ஜூலை 5ம் தேதி வரை லேசாக பெய்யும்.