செங்கல்பட்டு: ஆதிதிராவிட பழங்குடியின மாணவர்கள் வெளிநாட்டில் பயில அடிப்படை பயிற்சி வழங்குவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் ஆர்.ராகுல்நாத் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதன்அடிப்படையில் ஆதிதிராவிடர்/ பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதம் மாறிய இனத்தை சேர்ந்தவர்கள் அயல்நாடு சென்று புகழ்பெற்ற பல்கலைகழகங்களில் உயர் கல்வி பயில அடிப்படைத் தகுதியாக நிர்ணயிக்கப்பட்ட TOEFL , IELTS , GRE , GMAT போன்ற தகுதித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதம் மாறிய இனத்தைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும். 12ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொறியியல் மற்றும் மேலாண்மை (Engineering and Management) தூய அறிவியல் மற்றும் பண்பாட்டு அறிவியல் வேளாண் அறிவியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் சர்வதேச வர்த்தகம், பொருளதார, கணக்கியல் நிதி, மனிதநேயம், சமூக அறிவியல், நுண்கலை சட்டம், கலை மற்றும் அறிவியல் போன்ற படிப்புகளை அயல்நாடுகளில் பயில விரும்புபவராக இருக்கவேண்டும்.
குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும், இப்பயிற்சிக்கான செலவுகள் தாட்கோவால் வழங்கப்படும். இப்பயிற்சி முடித்து தேர்ச்சி பெறுவதன் மூலம் மாணவர்கள் விரும்பும் அயல் நாட்டு கல்வி நிறுவனத்தில் மேல்படிப்பினை தொடர வாய்ப்பு பெறலாம். இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம். இவ்வாறு கலெக்டர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.