Saturday, June 14, 2025
Home செய்திகள்Showinpage பாரில் கண்ணாடி, மதுபாட்டில்கள், சேர்களை உடைத்து ரகளையில் ஈடுபட்ட விவகாரம் அஜய் வாண்டையாரின் நெருங்கிய கூட்டாளி புனேவில் கைது

பாரில் கண்ணாடி, மதுபாட்டில்கள், சேர்களை உடைத்து ரகளையில் ஈடுபட்ட விவகாரம் அஜய் வாண்டையாரின் நெருங்கிய கூட்டாளி புனேவில் கைது

by Karthik Yash

* 13 நாட்கள் தேடலுக்கு பிறகு தனிப்படை நடவடிக்கை
* தென் மாவட்டங்களில் நடந்த குற்றங்களுக்கு தனது உணவகத்தில் ரவுடிகளுடன் திட்டம் தீட்டியது அம்பலம்

சென்னை: நுங்கம்பாக்கத்தில் பாரில் போதையில் நடனமாடும் போது ஏற்பட்ட தகராறில் கண்ணாடி, சேர்கள் மற்றும் மதுபாட்டில்களை உடைத்து ரகளையில் ஈடுபட்ட வழக்கில், கடந்த 13 நாட்களாக தலைமறைவாக இருந்த உணவக உரிமையாளரும் அஜய் வாண்டையாரின் கூட்டாளியான ராஜா என்பவரை தனிப்படை போலீசார் புனேவில் கைது செய்தனர். சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்த ராஜா. இவர் ஈசிஆரில் தூண்டில் என்ற பெயரில் உணவகம் நடத்தி வருகிறார். ராஜா கடந்த 22ம் தேதி இரவு தனது நண்பர்களான அதிமுக தொழில் நுட்பபிரிவு நிர்வாகி பிரசாத்(33), கணேஷ்குமார்(42), தனசேகரன்(29) உள்ளிட்டோருடன் நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள பிரபல தனியார் பாரில் மது அருந்தி கொண்டிருந்தார்.

அப்போது இசைக்கு ஏற்றபடி பலர் நடனமாடி கொண்டிருந்தனர். இதை பார்த்து போதையில் இருந்து ராஜா, வயதான காலத்தில் இது தேவையா என நடனமாடுபவர்களை பார்த்து கேலி, கிண்டல் செய்துள்ளார். அப்போது பக்கத்து இருக்கையில் மது அருந்தி கொண்டிருந்த செல்வபாரதி என்பவர் அதை தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ராஜாவுக்கும் செல்வபாரதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ராஜா தனது நண்பர்களுடன் சேர்ந்து செல்வபாரதி தரப்பை கடுமையாக தாக்கினர். அதோடு இல்லாமல் போன் செய்து அதிமுக நிர்வாகியான அஜய் வாண்டையார் மற்றும் ரவுடி சுனாமி சேதுபதி உதவியுடன் ரவுடி கும்பலை வரவழைத்து பாரை அடித்து நொறுக்கினர்.

இதுகுறித்து பார் மேலாளர் வெங்கட்குமார் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இரண்டு தரப்புகள் மீதும் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் தூண்டில் உணவக உரிமையாளர் ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை அறிந்த அஜய் வாண்டையார் மற்றும் ரவுடி சுனாமி சேதுபதி ஆகியோர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று இன்ஸ்பெக்டரை பணி செய்யவிடாமல் ராஜா மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற கோரி மிட்டியுள்ளனர். இதுகுறித்து உயர் காவல்துறை அதிகாரிகள் கவனத்திற்கு சென்றதும், அஜய் வாண்டையார், ரவுடி சுனாமி சேதுபதி ஆகியோரை தனிப்படையினர் தேனியில் கைது செய்தனர். பிறகு அதிமுக தொழில் நுட்ப பிரிவு நிர்வாகி பிரசாத், கணேஷ்குமார், தனசேகர் ஆகியோரை சென்னையில் கைது செய்தனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான தூண்டில் உணவக உரிமையாளர் ராஜா, சந்தோஷ், தீபக் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். இதையடுத்து அவர்களை பிடிக்க நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் மற்றும் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் அவர்களின் செல்போன் மற்றும் உறவினர்கள் செல்போன் சிக்னல்கள் உதவியுடன் விசாரணை நடத்திய போது, ராஜா புனே பகுதியில் நண்பர்கள் உதவியுடன் பதுங்கி இருப்பது தெரியவந்தது. தனிப்படை போலீசார் விமானம் மூலம் புனே சென்று அங்கு தலைமறைவாக இருந்த ராஜாவை அதிரடியாக நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராஜாவை தனிப்படையினர் சென்னைக்கு அழைத்து வருகின்றனர். ராஜா நடத்தும் உணவகத்தில் தான் தென் மாவட்டங்களில் கொலை மற்றும் ஆள் கடத்தல் வழக்குகளில் போலீசார் தேடி வரும் ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வந்துள்ளார்.

அவரது உணவகத்தில் தான் தென் மாவட்டங்களில் எந்த தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பது, கொலை செய்வது குறித்து திட்டம் வகுத்து நடைமுறைப்படுத்தியதாக, அஜய் வாண்டையார் உடன் கைது செய்யப்பட்ட ராமநாதபுரத்தை சேர்ந்த ரவுடி சுனாமி சேதுபதி போலீசாரிடம் அனைத்து விபரங்களையும் வாக்குமூலமாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ராஜாவுக்கும், சிறையில் உள்ள அஜய் வாண்டையார் மற்றும் ரவுடி சுனாமி சேதுபதிக்கும் உள்ள தொடர்புகள் என்ன? இதுவரை எத்தனை கொலைகளுக்கு ராஜாவின் உணவகத்தில் திட்டம் வகுக்கப்பட்டது. இதன் பின்னணியில் உள்ள நபர்கள் யார் யார் என்பது குறித்து கைது செய்யப்பட்ட ராஜா, அவரது கூட்டாளியான அஜய் வாண்டையார், ரவுடி சுனாமி சேதுபதி ஆகியோரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi