சென்னை: முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் மசினி என்ற யானை தாக்கி உயிரிழந்த பாகன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு மற்றும் அபயாரண்யம் பகுதிகளில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்கு கும்கி யானைகள், சவாரிக்கு பயன்படும் யானைகள், ஓய்வு பெற்ற யானைகள் மற்றும் குட்டி யானைகள் உள்ளிட்ட யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நீலகிரி முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் மசினி யானை தாக்கியதில் பாலன் என்ற பாகன் உயிரிழந்தார்.
யானைக்கு இன்று காலை உணவு அளிக்க அருகே சென்ற போது பாகனை திடீரென தாக்கியதில், பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியே உயிரிழந்தார். மசினி யானை ஏற்கனவே 2019ல் சமயபுரம் கோவியிலில் இருந்தபோது பாகனை தாக்கி கொன்றதால், முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டு வரபட்டது குறிப்பிடத்தக்கது. பாகன் உயிரிழப்பு தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உயிரிழந்த பாகன் பாலன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் அறிவித்துள்ளார். மேலும் பாகன் பாலனின் மகனுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.