மீனம்பாக்கம்: மொரிசியஸ் நாட்டிலிருந்து ஏர் மொரீசியஸ் பயணிகள் விமானம் 320 பயணிகளுடன் நேற்று மாலை சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. விமானத்தில் மொரிசியசை சேர்ந்த மோனிஸ் குமார் (37), பூஜா (32) தம்பதியினர், தங்களது பெண் குழந்தை லிஸ்னாவுடன் பயணித்தனர். மொரிசியசில் கடந்த மாதம் 26ம் தேதி பிறந்த இந்த குழந்தைக்கு, இதயத்தில் பிரச்னை என்பதால், இதய சிகிச்சைக்காக, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள, பிரபல தனியார் மருத்துவமனைக்கு மருத்துவ உதவியாளர் ஒருவரின் துணையுடன் கொண்டு வந்தனர்.
விமானம் நடு வானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென குழந்தையின் உடல்நிலை மோசமடைந்தது. உடனே பணிப்பெண்கள், விமானிக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கி சென்னையில் விமானம் உடனடியாக தரையிறங்க அனுமதி கேட்டார். அனுமதி கிடைத்ததும் விமானம் தரை இறங்கியது.
உடனடியாக, மருத்துவ குழுவினர், விமானத்துக்குள் ஏறி குழந்தையை பரிசோதித்தனர். ஆனால் குழந்தை இறந்து விட்டது தெரியவந்தது. பெற்றோர் கதறி அழுதனர். அவர்களை சக பயணிகளும் விமான ஊழியர்களும் ஆறுதல் கூறி தேற்றினர். இதையடுத்து விமான நிலைய போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து, குழந்தையின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விமானம் வழக்கமாக சென்னையில் இருந்து மீண்டும் மொரிசியசுக்கு, மாலை 6.35 மணிக்கு புறப்பட்டு செல்லும். ஆனால் குழந்தை உயிரிழந்து விட்டதால், விமானத்தை தூய்மைப்படுத்தி விட்டு ஒரு மணி நேரம் தாமதமாக இரவு 7.35 மணிக்கு 288 பயணிகளுடன் விமானம் புறப்பட்டு சென்றது.