Saturday, February 15, 2025
Home » ஆயுத பூஜை தொடர் விடுமுறை எதிரொலி ஆம்னி பஸ் கட்டணம் பல மடங்கு உயர்வு: பஸ் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

ஆயுத பூஜை தொடர் விடுமுறை எதிரொலி ஆம்னி பஸ் கட்டணம் பல மடங்கு உயர்வு: பஸ் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

by Ranjith

சென்னை: தமிழ்நாட்டில் சனி, ஞாயிறு விடுமுறையுடன் திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை சேர்ந்து வருவதால் 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால், மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது, சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளனர். இதற்காக, தமிழக அரசு பல ஊர்களுக்கு சிறப்பு பஸ்களை இயக்குவதாக அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் நாளை, நாளை மறுநாள் மற்றும் 22ம் தேதி ஆகிய 3 நாட்களுக்கு 2,265 சிறப்பு பஸ்கள், கோவை, திருப்பூர், பெங்களூரு போன்ற நகரங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 1,700 பஸ்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் விடுமுறை காரணமாக ரயில்களில் ஒரு வாரத்துக்கு முன்பே இருக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டது. அரசு விரைவு பேருந்துகளில் அனைத்து இடங்களும் பெரும்பாலும் நிரம்பிவிட்டன. குறிப்பாக 20, 21 மற்றும் 24ம் தேதிகளில் இடங்கள் இல்லை. பிற போக்குவரத்து கழக பேருந்துகளிலும் விறுவிறுப்புடன் முன்பதிவு நடைபெறுகிறது. சென்னையில் இருந்து 20, 21, 22 மற்றும் வெளியூர்களுக்கு சென்னை திரும்ப 24, 25ம் தேதிகளில் பயணம் செய்ய பெரும்பாலான இடங்கள் நிரம்பியுள்ளன.

ரயில்கள் மற்றும் அரசு பேருந்துகளில் இடம் கிடைக்காதவர்களின் கடைசி தேர்வு ஆம்னி பஸ்கள் தான். பொதுமக்களின் அவசரத்தை பயன்படுத்தி ஆம்னி பஸ்கள் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி உள்ளன. அதேபோல தற்போது ஆம்னி பஸ்களில் வழக்கம் போல பயணிகளின் அவசரத்தை பொறுத்து கட்டணத்தை உயர்த்துகின்றனர். அதாவது ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மதுரை, விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்களில் ஏ.சி., வசதி இல்லாத சிலீப்பர் மற்றும் இருக்கைகளுக்கு 2 மடங்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்.

வழக்கமாக டிக்கெட் விலை ரூ.600. ஆனால், விழா காலத்தை பயன்படுத்தி டிக்கெட் ரூ.1300 முதல் ரூ.1,700 வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஏ.சி.வசதியுடன் சிலீப்பர் மற்றும் இருக்கைகளுக்கு வழக்கமாக ரூ.900க்கும், ரூ.1,500க்கும் விற்கப்படும். தற்போது டிக்கெட் ரூ.1,800 முதல் ரூ.2,500 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல கோவை, சேலம், திருப்பூர் பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளில் ஏ.சி. வசதி இல்லாத சிலீப்பர் மற்றும் இருக்கைகளுக்கு வழக்கமான கட்டணங்களில் இருந்து ரூ.500 முதல் ரூ.1,500 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் ஏ.சி. வசதி இல்லாத சிலீப்பர் மற்றும் இருக்கைகளுக்கு வழக்கமாக ரூ.750 கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் ரூ.1,500 முதல் ரூ.1,800 வரை வசூலிக்கப்படுகிறது. ஏ.சி. வசதியுடன் சிலீப்பர் மற்றும் இருக்கைகளுக்கு வழக்கமான கட்டணத்தில் இருந்து ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. வழக்கமாக ரூ.1,000 கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் ரூ.2,500 முதல் ரூ.3,000 வரை வசூலிக்கப்படுகிறது. இந்த அதிக கட்டண உயர்வு குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

11 + 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi