வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி நிலையம் செல்ல ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலன் இருக்கையில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 பேரும் அமர்ந்தனர். உடன் செல்லும் 3 விண்வெளி வீரர்களுடன் சுபான்ஷூ சுக்லா விண்கலனுக்குள் இருக்கும் காட்சி வெளியாகி உள்ளது. இஸ்ரோ, நாசா மற்றும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் ஆக்சியம்-4 திட்டம் கடந்த 11ம் தேதி செயல்படுத்தப்பட இருந்தது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் ஏவப்படவிருந்த இந்த பயணம், மோசமான வானிலை, ஆக்சிஜன் கசிவு உள்ளிட்ட பல்வேறு கோளாறு காரணமாக அடுத்தடுத்து 6 முறை ராக்கெட் ஏவுதல் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் ஆக்சியம் -4 விண்வெளி பயணத்தை விண்வெளி வீரர்கள் இன்று தொடங்குகிறார்கள். புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸின் பால்கன் 9 ராக்கெட் மூலமாக இன்று நண்பகல் 12.01 மணிக்கு டிராகன் விண்கலம் விண்ணில் ஏவப்படுவதாக நாசா அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில், இந்திய விண்வெளி வீரர் சுக்லாவுடன், அமெரிக்கா , ஹங்கேரி, போலந்தை சேர்ந்த வீரர்கள் விண்வெளி பயணத்தில் பங்கேற்றுள்ளனர்.அதன்படி, ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தின் இருக்கையில் சுபான்ஷூ உள்ளிட்ட 4 வீரர்கள் அமர்ந்துள்ளனர்.
இதனிடையே ஸ்பேஸ் எக்ஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “ஆக்ஸியம் 4 திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் தயார் நிலையில் உள்ளன. திட்டமிட்டபடி ஆக்ஸியம் 4 திட்டம் செயல்படுத்தப்படும். ராக்கெட் ஏவுதலுக்கான வானிலையும் 90% சாதகமாக இருக்கிறது, “இவ்வாறு தெரிவித்துள்ளது.