திருப்பூர்: வரதட்சணை கொடுமையால் புதுப்பெண் தற்கொலை வழக்கில் கைதான கணவர் மற்றும் மாமனாருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என அப்பெண்ணின் பெற்றோர் திருப்பூர் நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூரை சேர்ந்தவர் அண்ணாதுரை (53). பனியன் நிறுவன அதிபர். இவரது மனைவி ஜெயசுதா (42). இவர்களது ஒரே மகள் ரிதன்யா (27). எம்எஸ்சி பட்டதாரி. ரிதன்யாவுக்கும், இதே பகுதியில் உள்ள ஜெயம்கார்டனை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி-சித்ராதேவி தம்பதியின் மகன் கவின்குமாருக்கும் (27) கடந்த ஏப்ரல் 11ல் திருமணம் நடைபெற்றது. இவர் கார்மெண்ட்ஸ் டிரேடிங் கம்பெனி உரிமையாளர். திருமணத்தின்போது ரிதன்யாவிற்கு 300 பவுன் நகையும், மாப்பிள்ளைக்கு ரூ.70 லட்சத்திற்கு சொகுசு காரும் வாங்கி கொடுத்ததோடு, ரூ.2.25 கோடி செலவு செய்து திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி கோயிலுக்கு செல்வதாக காரில் புறப்பட்ட ரிதன்யா கைகாட்டிப்புதூரில் காருக்குள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக, தனது தந்தையின் வாட்ஸ் அப்பிற்கு கதறி அழுதபடி ஆடியோ பதிவை அனுப்பியிருந்தார். அதில், 500 பவுன் நகை வரதட்சணை கேட்டதாகவும், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ரிதன்யாவை கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் தொடர்ந்து சித்ரவதை செய்ததாகவும் கூறியிருந்தார். மேலும், தற்கொலைக்கு காரணம் கணவர் கவின்குமார் அவரது பெற்றோர் ஈஸ்வரமூர்த்தி-சித்ராதேவி ஆகியோர் தான் என்று கூறியிருந்தார்.
இதுதொடர்பாக, சேவூர் போலீசார் வழக்குப்பதிந்து ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோரை கைது செய்தனர். மாமியார் சித்ராதேவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவரை கைது செய்யவில்லை. அதன்பின், அவர் தலைமறைவானார். இந்த நிலையில், இந்த வழக்கில் ரிதன்யாவின் கணவர் கவின்குமார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு நேற்று (3ம் தேதி) திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவின் மீது இடையீட்டு மனு தாக்கல் செய்த ரிதன்யாவின் பெற்றோர், ஜாமீன் வழங்கக்கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனை பதிவு செய்த நீதிபதி ஜாமீன் மனு மீது நாளை (வெள்ளிக்கிழமை) விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்து வழக்கை ஒத்தி வைத்தார். மனு தாக்கல் செய்ய வந்திருந்த ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை தனது மகள் இறப்பிற்கு நீதி கிடைக்க வேண்டுமென நீதிமன்ற வளாகத்தில் கையெடுத்து கும்பிட்டு கண்ணீர் விட்டு அழுதார்.