டெல்லி: இந்தியாவில் பல்வேறு விமானங்கள், விமான நிலையங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைகள் நிறைந்திருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் உலகையே அதிரவைத்த நிலையில், இதை தொடர்ந்து இந்திய விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் ஆய்வு செய்தது. விமான இயக்கங்கள், தரை கட்டுப்பாட்டு நிலையங்களின் செயல்பாடு, தகவல் தொடர்பு வசதிகள், விமான பரிசோதனைகள் என பல்வேறு அம்சங்கள் தணிக்கை செய்யப்பட்டன.
இதில் தேய்ந்து போன டயர்களுடன் பறந்த விமானம், ஓடுபாதை கோடுகள் அழிந்திருப்பது, பராமரிப்பு தொடர்பான வழிகாட்டு விதிகள் பின்பற்றப்படாதது என பல்வேறு குறைபாடுகள் தெரிய வந்தன. முக்கியமான தரவுகளை பதிவு செய்யாததும், மென்பொருட்கள் மேம்படுத்தப்படாமல் இருந்ததும் தணிக்கையில் தெரிய வந்துள்ளது. டெல்லி, மும்பை போன்ற மிக முக்கிய விமான நிலையங்களில் கூட குறைப்பாடுகள் இருந்தது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இப்பிரச்சனைகள் ஒரு வாரத்திற்குள் தீர்வு காண வேண்டும் என விமான நிலைய நிர்வாகிகளுக்கு, விமான நிறுவனங்கள் உத்தரவிட்டுள்ளது.