Saturday, September 30, 2023
Home » அவலுடன் சர்க்கரை கலந்து தந்தால் வாழ்வை இனிக்கச் செய்வார் சாய்பாபா!

அவலுடன் சர்க்கரை கலந்து தந்தால் வாழ்வை இனிக்கச் செய்வார் சாய்பாபா!

by Kalaivani Saravanan

வியாழக்கிழமையில், அவல், சர்க்கரை, தேங்காய்த்துருவல் கலந்து நைவேத்தியம் செய்து வழிபட்டால் சகல கஷ்டங்களில் இருந்தும் நம்மை விடுவித்துக் காத்தருளுவார் பாபா. நம் வாழ்க்கையையே இனிக்கச் செய்வார் ஷீர்டி சாயிபாபா!

சந்தோஷத்துக்காகத்தான் நாம் ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறோம். லட்சங்களைச் சம்பாதித்தாலும் நிம்மதியைத்தான், மன அமைதியைத்தான் விரும்புகிறோம். அது எங்கே கிடைக்கும் என்று இறைவன் இருக்கும் ஸ்தலங்களுக்கெல்லாம் சென்றுகொண்டிருக்கிறோம்.

’’நம் சந்தோஷம்தான், நம்மைப் பெற்றவர்களுக்குக் குதூகலம். நாம் ஆனந்தப்பட்டால், பொறாமைப்படுவதற்கும் அந்த மகிழ்ச்சியைக் குலைப்பதற்கும் இங்கே மனிதர்கள் உண்டு. அடுத்தவர் தோல்வியே தன் வெற்றி என்று, வெற்றிக்கான வழிகளை தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், நம் சந்தோஷத்தை, நம்முடைய வளர்ச்சியை, நம் மனதுள் குடிகொண்டிருக்கும் நிம்மதியை, நாம் அடைகிற வெற்றியைப் பார்த்து குதூகலிக்கிறவர்கள், அதைக் கண்டு கொண்டாடுகிறவர்கள் நம்முடைய பெற்றோர்தான். அப்படி, பெற்றவர்களுக்கு நிகராக நம் வெற்றியைக் கண்டு பூரிப்பவர்கள் குருமார்கள்தான்; ஆசிரியர்கள்தான். அப்படி நமக்கு எல்லாமுமாக இருப்பவர்தான் பாபா’’ என்கிறார் ஐயப்ப பாடகரும் சாயிபாபா பக்தருமான வீரமணி ராஜூ.

அதேபோல், நமக்கு ஏதேனும் சின்ன வலியோ வேதனையோ என்றால் துடித்துப்போகிறவர்களும் அவர்கள்தான். “ஐயோ… எம்புள்ள கஷ்டப்படுறானே…” என்று கலங்கிவிடுவார்கள். எங்கே இருந்தாலும் நம்மருகில் ஓடிவந்துவிடுவார்கள். நம்மைத் தேற்றுவதிலும் அதில் இருந்து நம்மை மீட்டெடுப்பதிலும் துணையாக இருப்பார்கள்.

பகவான் சாயிபாபாவும் அப்படித்தான். அப்பாவுக்கு அப்பாவாக, அம்மாவுக்கு அம்மாவாக இருந்து நம்மை வழிநடத்தி அருளும் ஒப்பற்ற ஆசானாகத் திகழ்கிறார் இந்த அற்புத மகான். கண்கண்ட தெய்வமாக இருந்து, நமக்கு அருளுகிறார் ஷீர்டி நாதன். அவரை நம்பியவர்களை, ஒருபோதும் கைவிடமாட்டார். அவருடைய பக்தர்களாகிய நாம் துடிப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்.

பகவான் சாயிபாபா, நம் தந்தைக்கு நிகரானவர். சிக்கலும் குழப்பமுமாக நாம் இருக்கும் வேளையில், தந்தையாகவே வந்து, நம் சிக்கல்களையும் குழப்பங்களையும் களைந்து அருளுவார். நம் அன்னைக்கு இணையானவர் பாபா. நம் கண்ணீரைத் துடைத்தெடுக்கும் கரம் சாயிபாபாவின் திருக்கரமாகத்தான் இருக்கும். அந்த மகான் வழங்கும் ஆறுதல், நம்மைத் தேற்றும். தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாதையைக் காட்டி உயர்த்திவிடும். ஒரு குருவாக, ஞானாசிரியனாக, மகானாக இருந்து அவர் நமக்கு அருளிச்செய்வார். அதுதான் பாபாவின் பெருங்கருணை.

“சாய்ராம் என்று நீங்கள் கூப்பிடுகிற போதெல்லாம் நான் உங்களுக்குப் பக்கத்தில் வந்துவிடுகிறேன். உங்களுக்குப் பக்கத்திலேயே இருந்து உங்களை வழிநடத்துகிறேன்’’ என்று பகவான் சாயிநாதன் அருளியிருக்கிறார். இது சத்தியவாக்கு. ‘சாயி சத்சரிதம்’ சொல்லும் அற்புத வாக்கு.

’’கஷ்டமும் நஷ்டமும் யாருக்குத்தான் இல்லை. வலியும் வேதனையும் இல்லாத வாழ்க்கையை இங்கே, எவர்தான் வாழ்கிறார்கள்? உங்களின் கஷ்டமும் நஷ்டமும் தீரவும், வலியும் வேதனையும் போகவும், வியாழக்கிழமையில்… பூஜையறையில் அமர்ந்து, ஐந்து நிமிடம் கண்கள் மூடி, ‘சாய்ராம்… சாய்ராம்… சாய்ராம்…’ என்று சொல்லிக் கொண்டே இருங்கள். முடிந்தவரை சொல்லிக் கொண்டே இருங்கள். சாயிபாபாவை அழைத்துக் கொண்டே இருங்கள். ஏதேனும் ஓர் ரூபத்தில், எவருடைய வடிவமாகவோ உங்களுக்கு அருகில் வந்தேதீருவார் சாயிபாபா. உங்கள் பிரச்சினைகளையெல்லாம் தீர்த்து, உங்கள் குடும்பத்துக்கு நல்வழி காட்டியருளுவார் ஷீர்டி நாயகன்’’ என்கிறார் வீரமணி ராஜூ.

சாயிபாபாவை மனதில் நிறுத்தி, ஒவ்வொரு தருணங்களிலும் ‘சாய்ராம்… சாய்ராம்…’ என்று லட்சக்கணக்கான பக்தர்கள் அழைக்கிறார்கள். தங்கள் மனதில் கொட்டிக் கிடக்கிற மொத்தவலிகளையும் அவரிடம் கொட்டுகிறார்கள். மனதாலும் உடலாலும் படுகிற சிரமங்களில் இருந்து நம்மைக் காத்தருளத் தயாராக இருக்கிறார் சாயிபாபா!

நரம்பு மற்றும் எலும்பு சம்பந்தமான நோய்களால் அவதிப்படுபவர்கள் பாபாவை வணங்கி வாருங்கள். உடலாலும் மனதாலும் நொந்துபோனவர்களை பாபா ஒருபோதும் கைவிடமாட்டார்! சாயிபாபா தன் கையில் வைத்திருக்கும் ‘சட்கா’ எனும் குச்சியைக் கொண்டு உருவாக்கிய துனி நெருப்பு கேள்விப்பட்டிருக்கிறீர்களா. அது அணையா நெருப்பு. நம் அத்தனை ஏமாற்றங்களையும் அவமானங்களையும் பொசுக்கிவிடுபவை; பாவங்கள் அனைத்தையும் போக்கவல்லவை என்கிறார்கள் பக்தர்கள்!

வீட்டுப் பூஜையறையில், பலகை ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். அந்தப் பலகையில் கோலமிடுங்கள். அந்தக் கோலத்தின் மீது மஞ்சள் துணியொன்றை விரித்துக் கொள்ளுங்கள். மஞ்சள் துணியின் மீது, சாயிபாபாவின் படத்தையோ சிலையையோ வைத்துக் கொள்ளுங்கள். ஊதுபத்தி ஏற்றுங்கள். பாபாவுக்கு பூக்களைச் சூட்டுங்கள். ஒரு மட்டைத் தேங்காயை பாபாவின் முன்னே வைத்துவிடுங்கள். கோரிக்கைகளை ஓர் கடிதம் போல் பாபாவுக்கு எழுதுங்கள். அப்படி எழுதியக் கடிதத்தையும் மட்டைத் தேங்காய்க்கு அருகில் வையுங்கள். அவல், சர்க்கரை, தேங்காய்த்துருவல் மூன்றையும் கலந்து நைவேத்தியமாக பாபாவுக்கு வழங்குங்கள். இதை… இந்தப் பிரசாதத்தை ‘புக்கே’ என்பார்கள்.

ஒன்பது வாரங்கள் இந்தப் பிரார்த்தனையைச் செய்யுங்கள். மனமுருகி இந்த வழிபாட்டில் ஈடுபடுங்கள். இந்த விரதம் மேற்கொள்கிற ஒன்பது வியாழக்கிழமைகளும் அரிசி உணவைத் தவிர்ப்பது நலமும் வளமும் தரும். மஞ்சள் நிறம் கொண்ட இனிப்பை நைவேத்தியமாகப் படைத்து, அதைப் பக்தர்களுக்கு, அக்கம்பக்கத்தாருக்கு என வழங்குவது நன்மைகளைத் தரும். உங்கள் பிரச்சினைகள் தவிடுபொடியாகும் என்பது நிச்சயம். உங்கள் துக்கமும் வேதனையும் காணாமல் போகும் என்பது நிச்சயம்.

உங்கள் வீட்டுக்கு அருகில் சாயிபாபா கோயில் இருக்கிறதா. அங்கே துனி நெருப்பு எனப்படும் அணையா நெருப்பு இருக்கும். ஏதேனும் ஒருநாளில்… 11 மட்டைத் தேங்காய்களை பாபா கோயிலுக்குச் சென்று நெருப்பில் சமர்ப்பியுங்கள். பாபாவிடம் மனமொன்றி உங்கள் குறைகளைச் சொல்லுங்கள். உங்கள் வாழ்வுக்குத் தடையாக இருப்பவற்றைப் பட்டியலிட்டுச் சொல்லுங்கள்.

ஏதேனும் ஒரு இனிப்பைத் தயார் செய்து பாபாவுக்கு படைத்து வேண்டுங்கள். கண்ணீர் விட்டு கவலைகளையெல்லாம் சொல்லுங்கள். அந்த ஞானத்தகப்பன் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டுக் கொண்டிருக்கிறான் என்பதைப் புரிந்து உணர்ந்து சொல்லுங்கள். பாபாவுக்கு படைத்த இனிப்புப் பிரசாதத்தை நீங்களும் சாப்பிட்டு, பிறருக்கும் வழங்குங்கள். உங்கள் வாழ்க்கையையே இனிக்கச் செய்வார் சாயிபாபா!

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?