Wednesday, June 25, 2025
Home செய்திகள்இந்தியா கொல்கத்தாவை பார்க்க வந்த வெளிநாட்டு பயணி; தனியாக இழுத்து சென்று எலும்பை உடைப்பேன்: மிரட்டிய ஆட்டோ டிரைவரின் வீடியோ வைரல்

கொல்கத்தாவை பார்க்க வந்த வெளிநாட்டு பயணி; தனியாக இழுத்து சென்று எலும்பை உடைப்பேன்: மிரட்டிய ஆட்டோ டிரைவரின் வீடியோ வைரல்

by Neethimaan

கொல்கத்தா: கொல்கத்தாவை சுற்றப் பார்க்க வந்த வெளிநாட்டு பயணியிடம், தனியாக இழுத்து சென்று எலும்பை உடைப்பேன் என்று மிரட்டிய ஆட்டோ டிரைவரின் வீடியோ வைரலாகி வருகிறது. இந்திய கலாசாரத்தை பற்றித் தெரிந்து கொள்வதற்காக மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா நகருக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அந்த வகையில் கொல்கத்தாவில் வந்திறங்கிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணியான டஸ்டின், ஆட்டோரிக்ஷா ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளரால் ஏமாற்றப்பட்டு மிரட்டப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக டஸ்டின், கொல்கத்தாவின் பார்க் ஸ்ட்ரீட் பகுதியில் உள்ள ஓட்டல் கிரேட் வெஸ்டர்னுக்கு செல்ல ஆட்டோவில் பயணித்தார். ஆனால், ஆட்டோ ஓட்டுநர் அவரை 15 கிமீ தொலைவில் உள்ள வேறு ஓட்டலுக்கு அழைத்துச் சென்று, 700 ரூபாய்க்கு பதிலாக 1,000 ரூபாய் கேட்டார்.

இதை டஸ்டின் கேமராவில் பதிவு செய்து, ‘டாக்ஸி டிரைவர் இன் கொல்கத்தா டிரைடு டு சீட் அண்ட் த்ரெட்டன் மீ’ என்ற தலைப்பில் யூடியூபில் பதிவேற்றினார். டஸ்டின் சரியான இடத்தை விளக்க முயன்றபோது, சிவப்பு சட்டை அணிந்த மற்றொரு நபர் தலையிட்டு, ‘நான் மாபியா கும்பலை சேர்ந்தவன்; உன்னை தனியாக இழுத்துச் சென்று எலும்புகளை உடைப்பேன்’ என்று பெங்காலி மொழியில் மிரட்டினார். இந்த மிரட்டல் கேமராவில் பதிவாகியது. பின்னர் அவர்கள், டஸ்டினை மற்றொரு ஆட்டோவில் ஏற்றிவிட்டு பார்க் ஸ்ட்ரீட்டுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அதற்கு முன் ‘பார்க்கிங் மற்றும் பெட்ரோல்’ செலவுக்கு கூடுதலாக 100 ரூபாய் கேட்டு மொத்தம் 800 ரூபாய் வசூலித்தனர். தனக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்தால், இனி விமான நிலையத்தில் இருந்து உள்ளூர் டாக்ஸிகளை பயன்படுத்த மாட்டேன் என்றும் எப்போதும் ஆன்லைன் வாடகை கார்களை மட்டுமே பயன்படுத்துவேன் என்று டஸ்டின் தெரிவித்தார்.

இந்த சம்பவம் கொல்கத்தாவில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு குறித்த விவாதத்தை எழுப்பியுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து கொல்கத்தா போலீசார் சம்பந்தப்பட்ட ஆட்டோ டிரைவர் மற்றும் மற்றொரு நபரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi