நெல்லை: தென்மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கும், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் விவசாய விளை நிலங்களின் பாசனத்துக்கும் அச்சாரமாகத் திகழும் தாமிரபரணி ஆறு, மதிகெட்ட மனிதர்களின் நெறியற்ற செயல்களால் பாழ்பட்டு வருகிறது. இந்நிலையில், நெல்லை மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் லூர்துராஜ் என்பவர், கடந்த பல ஆண்டுகளாக வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் தேங்கிக்கிடக்கும் கழிவுபொருட்களை தினமும் தனது நண்பர்கள் உதவியுடன் அகற்றும் பணியை தளர்வின்றி செய்து வருகிறார். கடந்த 3 நாட்களில் 200 அடி தூரத்துக்கு தாமிரபரணியை தூய்மைப்படுத்தி உள்ளார். இதன் மூலம் சுமார் 2 டன் கழிவு பொருட்கள், குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், மது பாட்டில்கள், பழைய துணிகள், பழைய செருப்புகள் உள்ளிட்டவைகளை அகற்றி உள்ளார். தினமும் வேலை நேரம் போக மற்ற நேரத்தில் தாமிரபரணியை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இவரது சேவையை பொதுமக்கள் மனதார பாராட்டுகின்றனர்.