சென்னை: சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 16ம் தேதி இரவு ஒரு தனியார் உணவகத்தில் உணவு உண்டதை தொடர்ந்து 42 பேர் வயிற்றுபோக்கு மற்றும் வாந்தி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக 17ம் தேதி அறிக்கை பெறப்பட்டது. மேலும், கலையரசி என்னும் 14 வயது மாணவி சிகிச்சை பலனளிக்காமல் இறந்ததாகவும் அறிக்கை பெறப்பட்டது. அதை தொடர்ந்து, உணவகம் உடனடியாக சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் உணவு பாதுகாப்பு துறையுடன் இணைந்து 13 சுகாதார ஆய்வாளர்கள் உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்புப் பணி நடக்கிறது.
ஏற்கனவே உணவு பாதுகாப்பு துறையின் மூலமாக கடந்த ஏப்ரல் 2023 முதல் ஆகஸ்ட் 2023 வரை தமிழ்நாடு முழுவதும் 38,191 ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளது. அதில் 1,478 ஆய்வுகள் நாமக்கல் மாவட்டத்தில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 7,825 சட்ட ரீதியான உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது, அதில் 214 நாமக்கல் மாவட்டத்தில் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு முழுவதும் 1,894 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.1.55 கோடி அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. எனவே, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து உணவகங்களிலும், உணவு தரமாக உள்ளதா என்பதை அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க கேட்டுக்கொள்கிறேன். மேலும், நாமக்கல் மாவட்ட நியமன அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆகியோரிடம் நடந்த சம்பவத்திற்கான துறைரீதியான விளக்கம் கேட்க உத்தரவிடப்பட்டுள்ளது.