*விவசாயிகள் தீவிரம்
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த வடுகக்குடி பகுதியில் வாழை விவசாயத்திற்காக ஆட்டு சாணம் மூலம் இயற்கை உரம் தயாரிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.தஞ்சை மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக தென்னை, கரும்பு, வெற்றிலை கொடிக்கால், வாழை அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது.
குறிப்பாக காவிரி கரையோர பகுதிகளில் தான் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. மாவட்டத்தில் உள்ள திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, கும்பகோணம், பாபநாசம், அய்யம்பேட்டை பகுதிகளில் அதிக அளவில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் வாழை விவசாயம் முக்கியமானது. காவிரி டெல்டா பகுதியில் பரவலாக வாழை பயிரிடப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் 3.39 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது.
அதில் 2.69 லட்சம் ஹெக்டேரில் பயிர்கள் பயிரிடப்படுகின்றன.தோட்டக்கலை சாகுபடி பரப்பளவு 45,330 ஹெக்டேர் ஆகும். இதில் பழங்கள் சுமார் 4,690 ஹெக்டேர்களில் பயிரிடப்படுகின்றன. 11 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் வாழை சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, பொங்கல் பண்டிகைக்காக வாழைத்தார்களை விவசாயிகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறார்கள்.இந்த பகுதிகளில் வாழை இலை மற்றும் வாழை நார் பொருட்கள் தயாரிப்பின் மூலம் ஏராளமானோர் தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.
தஞ்சையை சுற்றியுள்ள திருவையாறு, வடுகkkகுடி அம்மன்பேட்டை, திருக்காட்டுப்பள்ளி, மேலத்திருப்பூந்துருத்தி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாழை இலைகள் சென்னையில் உள்ள ஓட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இப்படி அனுப்பி வைக்கப்படும் இலைகளில் 2 வகைகள் உள்ளன. நுனி இலை, ஏடு என 2 வகைகளாக ஓட்டலுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதேபோல் வாழை நார்களும் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்தநிலையில் தற்போது திருவையாறு சுற்றுவட்டார பகுதிகளில் வாழை கன்றுகள் நடும் பணி தொடங்கும் நிலையில் உள்ளது. இதற்காக வாழை விவசாயிகள் தங்கள் பகுதியில் கிடைக்கும் ஆட்டு சாணங்களை விலைக்கு வாங்கி அதனை பவுடராக நுணுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து வாழை விவசாயி மதியழகன் கூறுகையில், இன்னும் சில தினங்களில் புதிதாக வாழைக்கன்றுகள் நடும் பண்ணி தொடங்க உள்ளோம். அதற்கான அனைத்து பணிகளிலும் தற்போது ஈடுபட்டு வருகிறோம்.
காவிரி டெல்டா பகுதியான திருவையாறு திருக்காட்டுப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது விவசாய பணிக்காக தண்ணீர் திறந்து முழுமையாக சென்று வருகிறது. அதனை பயன்படுத்தி வாழை சாகுபடியில் ஈடுபட உள்ளோம். நாங்கள் வாழை சாகுபடிக்கு செயற்கை உரங்களை பயன்படுத்துவதில்லை.
முழுமையாக இயற்கை உரத்தை மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். இயற்கை உரத்திற்காக எங்கள் பகுதியில் கிடைக்கும் ஆட்டு சாணத்தை பெற்று அதனை பவுடராக நுணுக்கி சாலையில் உலர்த்தி வருகிறோம்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு திருவையாறு பகுதியில் இருந்துதான் வாழையிலை வாழைப்பழம் வாழைநார் வாழைப்பூ ஆகிய அனைத்தும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாங்கள் உற்பத்தி செய்யும் வாழை சம்பந்தப்பட்ட அனைத்து பொருட்களும் தரமானதாக இருக்கும். இதற்குக் காரணம் இயற்கை உரம் தான். இவ்வாறு அவர் கூறினார்.