திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஆகஸ்ட் மாதத்தில் குறைவான அளவு மழை பெய்துள்ளது. கேரளாவில் ஒரு மாத இடைவெளிக்கு பின்னர் பருவமழை மீண்டும் தீவிரமடைந்து உள்ளது. கடந்த சில தினங்களாக திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம் உள்பட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் வடகிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது.
இது அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் என்பதால் கேரளாவில் பல்வேறு பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இன்று ஆலப்புழா மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் வழக்கமாக ஆகஸ்ட் மாதத்தில் தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்யும். இந்த வருடம் கடந்த மாதத்தில் வழக்கமாக பெய்யும் மழையில் 10 சதவீதம் கூட கிடைக்கவில்லை. கடந்த 100 வருடங்களில் கேரளாவில் ஆகஸ்ட் மாதத்தில் மிகவும் குறைவாக மழை பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.