துரைப்பாக்கம்: சென்னை மாநகர காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 90 இரு சக்கர வாகனங்கள் உட்பட 156 வாகனங்கள் வரும் 24ம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது. சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை பெருநகர காவலில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 66 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 90 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 156 வாகனங்கள், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் வரும் 24ம் தேதி காலை 10 மணிக்கு பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த ஏலத்திற்கான முன்பதிவு வரும் 21ம் தேதி காலை 10 மணி முதல் 2 மணி வரை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஏலத்தில் கலந்து கொள்ள வருபவர்கள் அடையாள அட்டை மற்றும் ஜிஎஸ்டி பதிவெண் சான்றுடன் வந்து முன்பதிவு கட்டணம் ரூ.1000 செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். முன் பணம் செலுத்தி பதிவு செய்த ஏலதாரர்கள் மற்றும் ஏலக்குழுவினர் ஆகியோர் முன்னிலையில் ஏலம் நடைபெறும். ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களுக்கான ஏல தொகையில் அன்றைய தினம் 25 சதவீதம் தொகையும், மீதமுள்ள ஏலத்தொகையான 75 சதவீத தொகை மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் மறுநாள் செலுத்திய பின் விற்பனை ஆணை வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.