ராஜ்பிப்லா: கொலை முயற்சி வழக்கில் குஜராத் ஆம் ஆத்மி எம்எல்ஏ சைதர் வாசவா கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டம் தெடியாபாடா தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான சைதர் வாசவா ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர். இவர் நேற்று முன்தினம் தெடியாபாடா தொகுதியில் நடந்த பஞ்சாயத்து தாலுகா கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பஞ்சயாத்து தாலுகா உறுப்பினராக சைதர் வாசவாவால் முன்மொழியப்பட்ட நபரை பஞ்சாயத்து உறுப்பினராக தேர்ந்தெடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த சைதர் வாசவா, தெடியாபாடா பஞ்சாயத்து தாலுகா அதிகாரி சஞ்சய் ராவ் மீது செல்போனை வீசி தாக்கி உள்ளார். இதில் சஞ்சாய் ராவின் தலையில் காயம் ஏற்பட்டதுடன், மூக்கு கண்ணாடி உடைந்ததாக கூறப்டுகிறது. அங்கிருந்த நாற்காலிகளையும் சைதர் வாசவா தூக்கி வீசி உள்ளார். மேலும் சக்பரா தாலுகா பஞ்சாயத்தின் பெண் தலைவரையும் சைதர் வாசவா திட்டி உள்ளார்.
இதுகுறித்த புகார்களின் அடிப்படையில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் சைதர் வாசாவாவை காவல்துறையினர் கைது செய்தனர்.