Sunday, May 18, 2025
Home செய்திகள்Showinpage கோடியக்கரை அருகே நடுக்கடலில் பரபரப்பு: தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்

கோடியக்கரை அருகே நடுக்கடலில் பரபரப்பு: தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்

by Neethimaan

* ரூ.3.50 லட்சம் பொருட்கள் பறிப்பு
* இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்

நாகப்பட்டினம்: கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள் அவர்களிடமிருந்து ரூ.3.50 லட்சம் மதிப்பிலான மீன்கள், மீன்பிடி உபகரணங்களை பறித்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் கடந்த 15ம்தேதி முதல் அமலில் உள்ளது. இதனால் விசைப்படகுகள் கரை நிறுத்தப்பட்டுள்ளது. பைபர், நாட்டுப்படகுகள் மட்டும் கடலில் 5 நாட்டிக்கல் வரை மீன் பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் ேவளாங்கண்ணி அருகே செருதூர் கிராமத்தை சேர்ந்த மீனவர் சுரேசுக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி (39), ரமேஷ்(38), வெற்றி (39), ரவி(30) ஆகியோர் கடந்த 15ம்தேதி மீன்பிடிக்க சென்றனர்.

நேற்றுமுன்தினம் இரவு நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரைக்கு வடக்கே 16 நாட்டிக்கல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அதிவேக பைபர் படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 பேர், இவர்களின் பைபர் படகை சுற்றி வளைத்து, மீனவர்கள் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதோடு, துடுப்பு கட்டையால் அவர்களை தாக்கினர். பின்னர் ஒரு இஞ்சின், 30 கிலோ மீன், 2 செல்போன், ஜிபிஎஸ் கருவி என ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளை அடித்து சென்றனர். இதனால் நடுக்கடலில் தவித்தவர்கள், சக மீனவர்களிடம் பெட்ரோல் வாங்கி நேற்று கரை திரும்பினர். இதுதொடர்பாக செருதூர் மீனவபஞ்சாயத்தார்களிடம் தகவல் தெரிவித்தனர். பின்னர் நாகை அரசு மருத்துவமனையில் 4 பேரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இதே போல் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதுப்பேட்டையை சேர்ந்த மீனவர் கவிதாசின் பைபர் படகில் ஜெகன் (36), ராமகிருஷ்ணன் (67), செந்தில் (46), சென்னையை சேர்ந்த சாமுவேல் (31) ஆகியோர் நேற்றுமுன்தினம் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நேற்று அதிகாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே 5 நாட்டிக்கல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்கொள்ளையர்கள் வழிமறித்து கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, கட்டையால் தாக்கி ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மீன்கள், மீன்பிடி உபகரணங்களை பறித்து சென்றனர். இதில் காயமடைந்த மீனவர்கள் 4 பேரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கடலோர காவல் குழும போலீசார், கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi