வேதாரண்யம்: நாகை மீனவர்கள் மீது மீண்டும் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளம் பகுதியை சேர்ந்த வைத்தியநாதசுவாமி (45), பைபர் படகில் ராமராஜன் (32), செல்வராஜ் (50) ஆகியோருடன் கடந்த 21ம் தேதி மீன்பிடிக்க சென்றனர். நேற்றுமுன்தினம் நள்ளிரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 2 பைபர் படகில் அங்கு வந்த 6 இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 மீனவர்களையும் இரும்பு கம்பியால் தாக்கி படகில் வைத்திருந்த ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி, பேட்டரி, மீன்பிடி வலைகள், மீன்கள், செல்போன், 20 லிட்டர் டீசல் உள்ளிட்ட பொருட்களை பறித்துக் கொண்டு விரட்டியடித்துள்ளனர்.
இதனால் அவசரம் அவசரமாக வெள்ள பள்ளம் கடற்கரைக்கு மீனவர்கள் நேற்று காலை வந்து சேர்ந்தனர். இதில் கம்பியால் தாக்கப்பட்டு கை, காலில் காயமடைந்த ராமராஜன் என்ற மீனவர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதேபோல் வெள்ளப்பள்ளம் பகுதியை சேர்ந்த அருள்பாண்டியன், கண்ணன் (40), சாமிநாதன் (28), பிரதீபன் (20) ஆகியோருடன் படகில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தார். அப்போது 2 படகுகளில் வந்த 6 இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களை தாக்கி 200 கிலோ வலைகளை வெட்டி கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.