Tuesday, March 25, 2025
Home » வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடலோர தமிழகத்தில் நாளை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடலோர தமிழகத்தில் நாளை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

by Ranjith

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடலோர தமிழகத்தில் நாளை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் தென் மண்டல இயக்குனர் பா.செந்தாமரை கண்ணன் கூறியதாவது: உள்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். 10ம் தேதி(நாளை) கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 11ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 12 மற்றும் 13ம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 14ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். இன்றும், நாளையும் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 டிகிரி, 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் தெளிவாக காணப்படும். அதிகாலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை 35 – 36டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை மற்றும் நாளை மறுநாள் தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

thirteen + 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi