ஏழுகிணறு பகுதியில் உயர் ரக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட உதவி இயக்குனர் உள்பட 3 பேர் கைது: ரூ.15 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்
தண்டையார்பேட்டை: போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கடந்த மாதம் 23ம் தேதி நடிகர் ஸ்ரீகாந்த்தும், கடந்த 26ம் தேதி நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டனர். அவர்களை தொடர்ந்து, இந்த வழக்கில் தொடர்புடைய பலரை போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை பூக்கடை சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா, போதை பாக்கு மற்றும் போதை பவுடர் விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, நேற்று முன்தினம் ஏழுகிணறு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, சந்தேகப்படும்படி நின்றிருந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.
அதில், ரூ.15 லட்சம் மதிப்புள்ள 750 கிராம் உயர் ரக கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்தனர். விசாரணையில், தண்டையார்பேட்டை வஉசி நகரை சேர்ந்த சினிமா உதவி இயக்குனர் பிரேம்குமார் (32), பிராட்வே பகுதியை சேர்ந்த அலெக்ஸ் சந்தோஷ் (34), திருவொற்றியூர் விம்கோ நகரை சேர்ந்த ராஜன் (36) என தெரியவந்தது. பிரேம்குமாரின் நண்பர் மலேசியாவில் உள்ளார். அவர் கூறியபடி உயர் ரக கஞ்சாவை கடத்தி வந்து, பதுக்கி வைத்து சென்னையில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கொடுத்த தகவலின்பேரில் இவர்களது கூட்டாளிகளான அஸ்லாம், அகஸ்டின் ஆகிய 2 பேரை தேடி வருகிறார்கள். மேலும் கஞ்சா விற்பனையில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். போதைப் பொருள் வழக்கில் சினிமா பிரபலங்கள் தொடர்ச்சியாக கைதாகி வரும் சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


