வேலூர்: சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கூறினார். வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயிலில் பாஜக தேசிய தலைவரும் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சருமான ஜே.பி.நட்டா நேற்று சுவாமி தரிசனம் செய்தார். அப்போது புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உடனிருந்தார். பின்னர் ஏ.சி.சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:
வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தலைமையிலும், டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலும் இந்த கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணியை புதிய நீதிக்கட்சி வரவேற்கிறது. இது வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். புதிய நீதி கட்சி, பாஜ, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளது.
வேலூரில் போட்டியிடுவது குறித்து தேர்தலுக்கு முன்பாக தான் முடிவாகும். சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். தமிழ்நாடு முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்வதால் போட்டியிடவில்லை. ஆனால், எங்கள் கட்சி சார்பில் வேலூர் மாவட்டத்தில் கண்டிப்பாக ஏதாவது ஒரு தொகுதியில் வேட்பாளர் போட்டியிடுவார். இவ்வாறு அவர் கூறினார்.