Tuesday, May 20, 2025
Home செய்திகள்Showinpage சட்டசபை தேர்தலில் கூட்டணி மட்டுமே பாஜவுக்கு ஆட்சியில் பங்கு கிடையாது: எடப்பாடி திட்டவட்டமாக அறிவிப்பு

சட்டசபை தேர்தலில் கூட்டணி மட்டுமே பாஜவுக்கு ஆட்சியில் பங்கு கிடையாது: எடப்பாடி திட்டவட்டமாக அறிவிப்பு

by Neethimaan


சென்னை: சட்டசபை தேர்தலில் பாஜவுடன் கூட்டணி மட்டுமே. கூட்டணி ஆட்சி கிடையாது என்று எடப்பாடி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி: அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.பொன்முடி, செந்தில்பாலாஜி ஆகியோருக்கு எதிராக பேரவையில் நம்பிக்கையின்மை தீர்மானம் கொண்டு வர நாங்கள் கடிதம் கொடுத்தோம். பேரவை தலைவரிடம் அனுமதி கேட்டோம். பேரவை தலைவர் அனுமதி மறுத்துவிட்டார். இது ஒரு முக்கியமான பிரச்னை. நீங்கள் கடந்த காலத்தில் பார்த்தீர்கள் என்றால் இதற்கு முன்பு அவையில் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் வருகின்ற போது எடுத்து இருக்கிறார்கள். அவையில் பேசுவதற்கு அனுமதி அளித்து இருக்கிறார்கள். தற்போது சட்டமன்ற பேரவை தலைவர் அனுமதி மறுத்த காரணத்தினாலே நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம்.

எங்கள் கூட்டணி வலுவான கூட்டணியா? வலுவில்லாத கூட்டணியா?. இதெல்லாம் தேர்தலில் தான் தெரியும். முதல்கட்டமாக பாஜ எங்களுடன் இணைந்திருக்கிறது. இன்னும் பல கட்சிகள் வரும். தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு இருக்கிறது. அதிமுக- பாஜ கூட்டணி அமைத்திருக்கின்றன. இந்த கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் விரைவில் சேர இருக்கின்றன. எங்கள் கட்சி. நாங்கள் யாருடனும் கூட்டணி வைப்போம். ஆகவே நாங்கள் கூட்டணி அமைத்தால் உங்களுக்கு என்ன கஷ்டமாக இருக்கிறது. உங்களுக்கு ஏன் எரிச்சல் வருகிறது. நாங்கள் யாருடனும் கூட்டணி வைப்போம். அது எங்கள் இஷ்டம். இவரோடு கூட்டணி வைத்தால் வரமாட்டோம். அவர்களோடு கூட்டணி வைத்தால் வர மாட்டோம் என்று நீங்கள் சொல்ல உங்களுக்கு தகுதியில்லை. அருகதை இல்லை. இதையெல்லாம் மக்கள் முடிவு. வாக்காளர் பெருமக்கள் முடிவு செய்வார்கள்.

16 ஆண்டு காலம் மத்தியிலேயே ஆட்சி அதிகாரத்தில் இருந்தது திமுக இந்த 16 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது அப்போது தி.மு.க. மாநில சுயாட்சி குறித்து சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றி இருந்தால் இந்த பிரச்சனை இருந்திருக்காது. ஆட்சி அதிகாரத்தில் இருந்தே போதெல்லாம் இதை கொண்டு வரவில்லை. ஆட்சி அதிகாரத்தில் இல்லாத போது வேறொருவர் மீது பழி சுமத்துவதற்காக 110-ன் கீழ் மாநில சுயாட்சி பற்றி இன்றைக்கு சொல்லிக்கொண்டிருக்கிறார். அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலுக்காக நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள். அதிமுகவுக்கு எதிலும் அக்கறையில்லை என்று அமைச்சர் ரகுபதி நேற்று பேசுகிறார். நீங்கள் மத்திய மந்திரியாக இருந்தீர்கள். அதிமுக தொண்டர்கள் இரவு பகல் பாராது உழைத்து ரத்தத்தை வியர்வையாக சிந்தி ரகுபதியை எம்எல்ஏவாக்கி மந்திரியாக ஆக்கியது.

ரகுபதியை அடையாளம் காட்டியது அதிமுக. அதையெல்லாம் மறந்து தன்னுடைய சுயலாபத்திற்காக அடிமையாக சென்று வேலை செய்து கொண்டிருக்கிறார். பச்சோந்தி அவர். அதிமுகவுடன் பாஜ கூட்டணி அரசு என்றெல்லாம் சொல்லவில்லை. நீங்கள் (நிருபர்கள்) தப்பாக புரிந்து கொண்டு ஏதோ வித்தைகளை காட்டுகிறீர்கள். தயவு செய்து இந்த வித்தைகளை விட்டுவிடுங்கள். அதாவது அதிமுக பாஜ கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று சொன்னார். திருப்பியும் சொன்னார். டெல்லிக்கு பிரதமர் மோடி. தமிழ்நாட்டுக்கு என்னுடைய பெயரை சொல்லி சொன்னார். இதிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியதுதானே. இதிலிருந்து ஏதேதோ கண்டு பிடித்து விஞ்ஞான மூளையை எல்லாம் பயன்படுத்தி கண்டுபிடிப்பதை விட்டுவிடுங்கள். அதை எல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi