Thursday, December 7, 2023
Home » சட்டமன்ற தேர்தல்: பிற்பகல் 3 மணி நிலவரப்படி சத்தீஸ்கரில் 59%, மிசோரத்தில் 68% வாக்குகள் பதிவு

சட்டமன்ற தேர்தல்: பிற்பகல் 3 மணி நிலவரப்படி சத்தீஸ்கரில் 59%, மிசோரத்தில் 68% வாக்குகள் பதிவு

by MuthuKumar

ராய்ப்பூர்: சிஆர்பிஎப், மாநில போலீசாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சட்டீஸ்கர், மிசோரமில் விறுவிறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சட்டீஸ்கரில் நக்சல் தாக்குதலால் ஒரு சிஆர்பிஎப் வீரர் காயமடைந்தார். இந்நிலையில் மிசோரமில் மியான்மர், வங்கதேச சர்வதேச எல்லைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பிற்பகல் 3 மணி நிலவரப்படி சத்தீஸ்கரில் 59%, மிசோரத்தில் 68% வாக்குகள் பதிவாகியுள்ளது.

சட்டீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இன்று தொடங்கி வரும் 30-ம் தேதி வரை வெவ்வேறு நாட்களில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறுகிறது. சட்டீஸ்கரை பொருத்தவரையில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இன்று முதல்கட்டமாக இன்று 20 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 40.78 லட்சம் பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். அவர்களுக்காக 5,304 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக நடைபெறும் 20 தொகுதிகளில் 12 தொகுதிகள் நக்சல் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதிகள் என்பதால், பஸ்தர் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் 600 வாக்குச் சாவடிகளில், சுமார் 60,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களில் 40,000 பேர் சிஆர்பிஎப் வீரர்கள் ஆவர். முன்னதாக நேற்று கன்கர், பிஜாபூர் பகுதிகளில் நக்சல் தீவிரவாதிகள் கண்ணிவெடி தாக்குதல்களை நடத்தியதால் 2 போலீசார் படுகாயமடைந்தனர். நாராயண்பூர் பகுதியில் 4 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதால், கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நக்சல் அச்சுறுத்தல் காரணமாக, குறிப்பிட்ட சில தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 3 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதர பகுதிகளில் வழக்கம்போல காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நக்சல் ஆதிக்கம் நிறைந்த கரிகுண்டம் பகுதியில் கடந்த 23 ஆண்டுகளுக்கு பிறகு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சட்டீஸ்கரில் இரண்டாம் கட்டமாக வரும் 17-ம் தேதி 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.

அதேபோல் மிசோரம் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தொகுதிகளில் 18 பெண்கள் உட்பட 174 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மியான்மர் மற்றும் வங்கதே சர்வதேச எல்லைப் பகுதியில் உள்ள 30 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளதால், அங்கு 9,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலை ஒட்டி மிசோரமின் சர்வதேச எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.

மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா இன்று காலை வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வந்தார். ஆனால் அவரால் வாக்களிக்க முடியவில்லை. வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், அவர் வெளியே வந்தார். மேற்கண்ட தொகுதிகளில் நடக்கும் வாக்குப்பதிவு எண்ணிக்கையானது, 5 மாநில தேர்தல்கள் முடிந்த பின்னர் வரும் டிசம்பர் 3-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?