சென்னை: ஆசிய தடகள போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீரர் செர்வினுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தென்கொரியாவில் குமி நகரில் இன்று தொடங்கிய 26வது ஆசிய தடகள போட்டி மே 31ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தடகள போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த 9 வீரர்கள் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்கேற்றுள்ளனர். இன்று நடைபெற்ற 20 கி.மீ. ரேஸ் வாக் ஆடவர் இறுதிப் போட்டியில் 1 மணி நேரம் 21 நிமிடம் 13 வினாடிகளில் 20 கி.மீ. இலக்கை கடந்து செர்வின் வெண்கலம் பதக்கம் வென்றார். இதற்கு செர்வினுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி, ஆசிய தடகள போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீரர் செர்வினுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறிய வாழ்த்து செய்தியில்;
கொரியாவின் குமியில் நடைபெற்ற 26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் 20 கி.மீ பந்தய நடைப்பயணத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற செர்வின் செபாஸ்டியனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த மதிப்புமிக்க சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும்.
எங்கள் சர்வதேச மிஷன் பதக்கத் திட்டத்தின் (MIMS) விளையாட்டு வீரரான செர்வினின் சிறந்த சாதனையில் நாங்கள் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சி இருந்தால், எதையும் எட்ட முடியும் என்பது ஒவ்வொரு இளைஞருக்கும் ஒரு சக்திவாய்ந்த செய்தி. நமது நாட்டிற்கும் நமது மாநிலத்திற்கும் பெருமை சேர்த்ததற்கு வாழ்த்துக்கள், செர்வின்.
எதிர்காலத்தில் நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறோம். உங்கள் இலக்குகளை அடைய தமிழ்நாடு அரசு முழு ஆதரவையும் வழங்கும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.