அருப்புக்கோட்டை: கந்தக பூமியான விருதுநகர் மாவட்டத்தில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அருப்புக்கோட்டை நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான செட்டிகுறிச்சி, பந்தல்குடி, சேதுராஜபுரம், வாழ்வாங்கி உள்ளிட்ட பகுதியில் நேற்று மாலை இடி, மின்னலுடன் பலத்த சூறைக்காற்று வீசியது. ஆனால் மழை பெய்யவில்லை.
சூறைக்காற்றுக்கு விளம்பர பலகைகள் சாய்ந்தன. மேலும், பல இடங்களில் மரங்கள் சாலையில் சாய்ந்தால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இடி, மின்னல் தாக்கியதில் பல வீடுகளில் இன்வெர்ட்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுதாகின. அருப்புக்கோட்டை-பந்தல்குடி நான்குவழி சாலையில் ஓட்டல்கள், கடைகள் முன்பு 5க்கும் மேற்பட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.