சென்னை: தமிழ்மொழிக்கு செம்மொழித் தகுதியைப் பெற்று தந்தவர் கலைஞர் என்று திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி புகழாரம் சூட்டியுள்ளார். கலைஞர் பிறந்தநாளையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;
*தமிழ்மொழிக்கு செம்மொழித் தகுதியைப் பெற்றுத் தந்தவர் கலைஞர் (2004)
*வட மொழியான சமஸ்கிருதத்திற்கும் செம்மொழித் தகுதி கிடைத்தது – தமிழ் செம்மொழியானதால்தான் (2005)
* செம்மொழி நாயகர் கலைஞருக்கு நன்றி காட்டும் விழா!
*வழி – விழி – மொழி மூன்றும் நமக்கு முக்கியம் என்று மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர் பிறந்த நாளில் சூளுரைப்போம்!
இன்று முத்தமிழறிஞர் கலைஞரின் 102 ஆவது பிறந்த நாள் – பெருவிழா!
‘உங்களை ஒரு வரியில் மதிப்பீடு செய்து கூறுங்கள்’ என்ற கேள்விக்கு, மானமிகு சுயமரிதைக்காரர் கலைஞர் ‘மானமிகு சுயமரியாதைக்காரன்’ என்று கூறி, இறுதிவரை அக்கொள்கையில் உறுதி காட்டி நின்றதோடு, அக்கொள்கை லட்சியப் பயணத்தில் எதிர்நீச்சல் அடித்து வெற்றி பெற்று, ஒரு புதுமைத் தமிழ்நாட்டை தனது ஆளுமையால் உருவாக்கியவர்.
நீதிக்கட்சி ஆட்சி போட்ட அடிக்கட்டுமானத்தின் மீது அறிஞர் அண்ணா எழுப்பிய ‘திராவிட அரசியல்’ ஆட்சிக் கட்டடத்தை மேலும் வலிவோடும், கொள்கைச் சாதனைகளை – புதுப்புது சமூகப் புரட்சி சட்டங்கள்மூலமும் தந்து வரலாறு படைத்தவர் மானமிகு சுயமரியாதைக்காரரான நம் செம்மொழி நாயகர்!
மக்களின் இதயச் சிம்மாசனத்தில் என்றைக்கும் வீற்றிருக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளில், நம்மை மேலும் பூரிப்படையச் செய்து, தமது ஆட்சியினை ‘‘திராவிட மாடல் ஆட்சி’’ என்று அகிலமே அழைத்துப் பெருமைப்பட வைத்த சாதனை நாயகர் இன்றைய நமது ஒப்பற்ற முதலமைச்சர் மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்!
* ஆட்சி வெறும் காட்சிக்கல்ல – அடிமைப்பட்ட இனம் மீட்சிக் காணவே!
என்று நிரூபித்து, சமரசமற்ற கொள்கை லட்சியப் பயணத்தை கலைஞர் போட்ட பாதையையே மேலும் விரிவாக்கி, வெற்றிக் களம் நோக்கி ஏறுநடை போட்டு,
‘‘உறவுக்குக் கைகொடுப்போம் –
உரிமைக்குக் குரல் கொடுப்போம்’’
என்று கலைஞர் அவர்கள் உருவாக்கிய முழக்கத்தின் முழுப் பொருளை செயல்மூலம் உலகத்திற்குக் காட்டி வருகிறார்.
* தமிழுக்குச் செம்மொழித் தகுதியை பெற்றுத் தந்தவர் கலைஞர்
நம் தமிழ் மொழிக்குச் செம்மொழித் தகுதியை உரிமைக்குரல் மூலமும், தக்க அரசியல் உறவுக்குக் கை கொடுத்தும், 2004 இல் 21 ஆண்டுகளுக்கு முன்பு – பெற்றுத் தந்த பெம்மான் நம் கலைஞர் என்ற செம்மொழித் தளபதி.
‘‘தமிழைச் செம்மொழி’’ என அறிவிக்க வலியுறுத்தி, 1918 ஆம் ஆண்டிலேயே ‘‘நீதிக்கட்சி’’ – திராவிடர் இயக்கம் – மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது!
தமிழ் செம்மொழி ஆனதால் அன்றோ, வட மொழிக்கு செம்மொழி சிம்மாசனத் தகுதி கிடைத்தது?
இந்த உண்மையை எவரே மறுப்பர்?
இந்திய ஒன்றிய அரசின் ஆணையால் 2004 இல் ‘செம்மொழி தமிழ்’ ஆகியது.
பிறகே சமஸ்கிருதத்திற்கு செம்மொழித் தகுதி கிடைத்தது (2005).
* செம்மொழி நாயகர் கலைஞருக்கு நன்றி காட்டும் விழா!
எந்த மொழியை ‘நீஷ பாைஷ’ என்று இழிவாகப் பேசினரோ, அதன் வழியே கிடைத்ததே, ‘‘தேவபாைஷ’’ என்று ‘அவாளால்’ சொல்லப்படுகின்ற, பேச்சு வழக்கொழிந்த சமஸ்கிருத மொழிக்கு செம்மொழித் தகுதி என்பது – திராவிடத்தின் பெருந்தன்மைக்குச் சரியான எடுத்துக்காட்டாகும்.
பகை பாராட்டியவர்களுக்கும் வழிகாட்டிய மானுடநேயத்தின் மறுபெயரே திராவிடமும், அதன் ஆட்சி நாயகர்களும்!
அப்படிப்பட்ட நம் கலைஞருக்கு, செம்மொழி நாயகர் என்று நன்றி காட்டும் விழாவே இது!
விழியும், வழியும், மொழியும் நமக்கு என்றும் மூச்சுக் காற்று என்று இன்று சுயமரியாதைச் சூளுரைப்போம்!. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.