டாக்கா: வங்கதேசத்தில் கடந்தாண்டு நடந்த மாணவர்கள் போராட்டத்தால், நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜிநாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பதவியேற்றார். ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஸமானை ஆலோசிக்காமல் இடைக்கால அரசின் தலைவர் சில முடிவுகள் எடுத்ததை தொடர்ந்து, இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வங்கதேச இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் யூனுஸ் பதவியிலிருந்து விலகுவது பற்றி யோசித்து வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன. இது குறித்து தேசிய குடிமக்கள் கட்சி தலைவரும் மாணவர்கள் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவருமான நஹீத் இஸ்லாம் நேற்று கூறுகையில், ‘‘ யூனுஸை சந்தித்து பேசினேன். அப்போது, பதவி விலகுவது பற்றி யோசிப்பதாகச் சொன்னார். தம்மால் பணியாற்ற முடியாதபடி பாதகமான சூழல் நிலவுவதாக அவர் கூறினார் ’’ என்றார்.