லக்னோ: ராணுவத்தை அவமதித்த வழக்கில் 5வது முறையாக ராகுல் காந்தி ஆஜராகாததால் அவருக்கு சட்ட ரீதியான சிக்கல் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய ராணுவத்தை அவமதிக்கும் வகையில் பேசியதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மீது உத்தரபிரதேச மாநிலம் லக்னோ நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கில், கடந்த பிப்ரவரி 11ம் தேதி ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என்று விசாரணை நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை ரத்து செய்யக் கோரி ராகுல் காந்தி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது கோரிக்கையை நிராகரித்த உயர்நீதிமன்றம், விசாரணை நீதிமன்றத்தின் சம்மன் செல்லும் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும், ஜூன் 4 மற்றும் ஜூன் 23 ஆகிய தேதிகளில் நடந்த விசாரணைகளில் ராகுல் காந்தி ஆஜராகவில்லை. அதைத் தொடர்ந்து, நேற்று (திங்கட்கிழமை) நடந்த விசாரணையிலும் ராகுல்காந்தி ஆஜராகவில்லை. இது அவர் நேரில் ஆஜராகத் தவறிய ஐந்தாவது முறையாகும்.
தொடர்ந்து அவர் ஆஜராகாதது, இந்த வழக்கின் சட்ட ரீதியான சிக்கலை அதிகரித்துள்ளது. ராகுல் காந்தி தொடர்ந்து ஆஜராகாததைக் கருத்தில் கொண்ட நீதிமன்றம், இந்த வழக்கில் தனது உத்தரவை ஒத்திவைத்துள்ளது. விரைவில் இதுதொடர்பான உத்தரவை விசாரணை நீதிமன்றம் பிறப்பிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.