தூத்துக்குடி: ராணுவத்திற்கு ஆதரவாக திமுக பேரணி நடத்துவது வரவேற்கதக்கது என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார். கன்னியாகுமரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அண்ணாமலை சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று காலை தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்தியா – பாகிஸ்தான் பிரச்னை நீண்ட நாட்களாக இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்த அளவில் அறத்தின் அடிப்படையில் இருக்கின்றோம். பாகிஸ்தான் நம் மீது தொடுக்கும் ட்ரோன்-க்கு பதிலடி கொடுத்து இருக்கின்றோம். நாம் மிகப்பெரிய பொருளாதார நாடு. பாகிஸ்தான் கூட சண்டை போடுவதால் நமக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை. தீவிரவாத தாக்குதலை வேரோடு அறுத்து எரிய வேண்டும். அதற்காகத்தான் இந்த போர் நடத்திக் கொண்டிருக்கின்றோம். பாகிஸ்தானை எதிர்ப்பதில் அனைவரும் ஒன்றாக இருக்கின்றார்கள். திமுக உட்பட அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்கிறார்கள். மேலும், ராணுவத்திற்கு ஆதரவாக திமுக பேரணி நடத்துவது வரவேற்கத்தக்கது.