பெரம்பூர்: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் தனது வீட்டின் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் சிறையில் உள்ள வியாசர்பாடி பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதுசம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்தநிலையில் நாகேந்திரனின் உறவினர்களின் வீடுகளில் கடந்த ஜனவரி மாதம் 7ம் தேதி புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமார் உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையில் போலீசார் சோதனை நடத்தி 51 கத்திகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் நாகேந்திரனின் உறவினர்களான வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த முருகன் (45), ரமேஷ் (44), தம்பிதுரை என்கின்ற தமிழரசன் (40), தமிழழகன் (39), கிஷோர் (30), சுகுமார் (29), தனுஷ் 28 உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நாகேந்திரனின் 2வது மகன் அஜித்ராஜ் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் தேடிவந்த நிலையில், அஜித்ராஜ் தலைமறைவானார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடிவந்த நிலையில், இன்று காலை அஜித்ராஜை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.