சென்னை: முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் தலைமை செயலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். தமிழகத்தில் தேர்தல் அதிகாரியாக இருந்த ராஜேஷ் லகானி மாற்றப்பட்டு, 2018 பிப்ரவரி 22ம் தேதி சத்தியபிரதா சாகு, நியமிக்கப்பட்டார். அவர் மார்ச் 15ம் தேதி பணியில் சேர்ந்தார். அவர் தொடர்ந்து சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலை தமிழகத்தில் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். 5 ஆண்டுகள் தொடர்ந்து மாநில தேர்தல் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
சில நாட்களுக்கு முன்னர் அவர் தமிழக தேர்தல் அதிகாரி என்ற பதவியுடன், கால்நடைத்துறை செயலாளராக கூடுதலாக நியமிக்கப்பட்டார். இதனால் அவர் தமிழக அரசுப் பணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றார்போல அவர் தமிழக அரசுப் பணிக்கு திரும்பியுள்ளார். அவருக்குப்பதில், அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார். ஓடிசா மாநிலத்தைச் சேர்ந்த அர்ச்சனா பட்நாயக், 1974ம் ஆண்டு பிறந்தார்.
2002ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று, தமிழக பணிக்கு அனுப்பப்பட்டார். தற்போது பொதுத்துறைச் செயலாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் தலைமை செயலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். தேர்தல் ஆணைய அதிகாரியாக நியமிக்கப்படுகிறவர் 6 ஆண்டுகள் வரை பணியாற்றலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


