திருவண்ணாமலை: ஆரணி அருகே மின்சாரம் தடைபட்ட காரணத்தால் டிரான்ஸ்பார்மர் மீது ஏறி பழுது பார்த்த நபர் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அரியபாடியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி விஜி. இவரது வீட்டில் மின்சாரம் தடைபட்டு இருக்கிறது. இதுகுறித்து மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்தும் சரி செய்யப்படவில்லை என தெரிகிறது.
இதனால் கூட்டுரோட்டில் உள்ள டிரான்ஸ்பார்மர் மீது ஏறி விஜி பழுது பார்க்க முயன்று இருக்கிறார். அப்போது டிரான்ஸ்பார்மரில் தீப்பிடித்ததால் பரபரப்பு நிலவியது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இது குறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.