Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆரணியில் பட்டப்பகலில் துணிகரம் அரசு பஸ்சில் பெண்ணிடம் ரூ.35 ஆயிரம், செல்போன் திருட்டு

*போலீசார் விசாரணை

ஆரணி : ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த திமிரி பிடிஓ ஆபீஸ் புதுத்தெருவை சேர்ந்தவர் சண்முகம்(35), தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பரிமளா(33), இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு பள்ளி விடுமுறை என்பதால் பரிமளா தனது மகன், மகளை ஆரணி டவுன் அருணகிரி சத்திரத்தில் உள்ள அவரது தாய்வீட்டில் விட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில், பரிமளா திமிரியில் இருந்து ஆரணியில் உள்ள அவரது தாய்வீட்டிற்கு சென்று, தனது மகன், மகளை வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக நேற்று வந்துள்ளார்.

பின்னர், பரிமளா தனது தாயிடம் மகன், மகள் படிக்கும் பள்ளியில் பீஸ் கட்டுவதற்காக ரூ.35 ஆயிரம் வாங்கி கொண்டு, குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஆரணி டவுன் பழைய பஸ்நிலையத்துற்கு வந்துள்ளார்.

அப்போது, ஆரணியில் இருந்து திமிரி வழியாக ஆற்காடு செல்லும் அரசு டவுன் பஸ்சில் பரிமளா தனது குழந்தைகளுடன் பஸ்சில் ஏறிச்சென்றுள்ளார். அப்போது, ஆரணி டவுன் பழைய பஸ்நிலையத்தில் இருந்து காந்தி சாலையில் சென்றபோது, திடீரென பரிமளா தான் கையில் வைத்திருந்த பையில் இருந்த பணம் மற்றும் செல்போன் இல்லாதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனால், பரிமளா பணம் திருடுபோனதால் பஸ்சில் கத்தி கதறி கூச்சலிட்டு கதறி அழுதார். உடனே, டிரைவர் பஸ்சை ஓரமாக நிறுத்தி தேடியும் கிடைக்கவில்லை. தகவல் அறிந்து வந்த ஆரணி டவுன் போலீசார் உடனடியாக பஸ்சை பயணிகளுடன் காவல்நிலையத்திற்கு எடுத்துச்சென்று, பஸ்சில் இருந்து பயணிகள் அனைவரையும் இறக்கி பரிசோதனை செய்தனர். ஆனால், பணம் கிடைக்கவில்லை. இதையடுத்து பஸ்சை போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, ஆரணி டவுன் போலீசில் பரிமளா நேற்று கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பஸ்நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் ஆரணியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.