சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அதிமுகவில் இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் நியமனம்: எடப்பாடி புதிய திட்டம்
8 தொகுதிகளை கவனிக்க கூடிய மாவட்ட செயலாளர்கள் இந்த புதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் தற்போது இரண்டு மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். இதனை 5 ஆக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆத்தூர், கெங்கவல்லிக்கு ஒரு மாவட்ட செயலாளரும், ஏற்காடு, வீரபாண்டிக்கு ஒருவரும், சங்ககிரி, இடைப்பாடிக்கு ஒருவரும், மேட்டூர், ஓமலூருக்கு ஒருவரும், சேலம் தெற்கு, வடக்கு, மேற்கு ஆகிய 3 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளரும் என பொறுப்பு வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அதிமுகவினர் தெரிவித்தனர். சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுக்கும் அதிமுகவில் 60 வட்ட செயலாளர்கள் உள்ளனர். இந்த வட்ட செயலாளர்கள் பொறுப்பையும் 10 பூத்துக்கு ஒரு வட்ட செயலாளர் என பிரிக்க இருக்கின்றனர். இதன்படி 120 பேர் வட்டச்செயலாளர்களாக ஆக்கப்படுவார்கள். தற்போது 8 பகுதி செயலாளர்கள் உள்ளனர். இதனை 16 ஆக உயர்த்தவும் ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இதனால் அதிமுகவினரிடையே பதவியை பெறும்வகையில் சுறுசுறுப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அதிமுகவினர் கூறுகையில், ‘‘வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அனைத்து நிர்வாகிகளுக்கும் பொறுப்பு வழங்கி அவர்கள் தேர்தல் பணியாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்படுவார்கள்,’’ என்றனர்.