சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று சென்னை, கிண்டி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த 1200 செவிலியர்களை பணிநிரந்தரம் செய்து, கோவிட் காலங்களில் பணிபுரிந்து பணிநீக்கம் செய்யப்பட்ட 963 செவிலியர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் மருத்துவர் 2553 பேர், கிராம சுகாதார செவிலியர்கள் 2,250 பேர், சுகாதார ஆய்வாளர்கள் 1,066 பேர், மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் 798 பேர், இயன்முறையாளர் 47 பேர் என்று ஆக மொத்தம் 6,714 பணியிடங்கள் நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மருத்துவ அலுவலர்கள் 2553 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதற்கு 23,971 பேர் விண்ணப்பித்திருந்தார்கள். மேலும் இந்த விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தேர்வுகள் நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்ள 10,914 மருத்துவமனைகளும் இதயம் காப்போம் திட்டத்தின் கீழ் உயிர் காக்கும் முக்கிய நேரமாக கருதப்படும் சமயத்தில் அளிக்கக்கூடிய மருந்துகள் எந்நேரமும் கையிருப்பில் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில் தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி, கூடுதல் இயக்குநர் சித்ரா, மருத்துவத்துறை உயரலுவலர்கள், மருத்துவ சங்க பிரதிநிதிகள், செவிலியர்கள் சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.