சென்னை: மாநில தகவல் ஆணையர்களாக வழக்கறிஞர்கள் வி.பி.ஆர்.இளம்பரிதி, எம்.நடேசன் ஆகியோரை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் தகவல் அதிகாரிகளிடம் இருந்து உரிய தகவல் கிடைக்கவில்லை என்றால் அதுதொடர்பான மேல் முறையீடு வழக்குகளை தமிழ்நாடு தகவல் ஆணையர்கள் விசாரித்து உத்தரவு பிறப்பிப்பார்கள். சென்னை நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் தலைவராக எம்.டி.ஷகீல் அக்தர் மற்றும் 4 தகவல் ஆணையர்கள் உள்ளனர்.
இந்நிலையில் வழக்கறிஞர்கள் வி.பி.ஆர்.இளம்பரிதி, கர்நாடக உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எம்.நடேசன் ஆகியோரை தகவல் ஆணையர்களாக நியமனம் செய்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. வழக்கறிஞர் வி.பி.ஆர்.இளம்பரிதி ராஜபாளையம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ வி.பி.ராஜனின் மகன். சிறந்த மேடை பேச்சாளர். உயர் நீதிமன்றத்தில் கூடுதல் அரசு பிளீடராக பணியாற்றி வருகிறார். வழக்கறிஞர் எம்.நடேசன் பெங்களூரு நீதிமன்றங்கள் மற்றும் கர்நாடக உயர் நீதிமன்றங்களில் வழக்கறிஞராக தொழில் செய்கிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அரசு தரப்புக்கு உதவும் வழக்கறிஞராக பணியாற்றியவர். இவர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை.