சென்னை: கல்வி நிறுவன கட்டிடங்களை வரன்முறைப்படுத்த இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நகர் ஊரமைப்பு இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: திட்டமில்லா பகுதிகளில் 1.1.2011க்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு, வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 1.7.2025 முதல் 30.6.2026 வரை ஓராண்டு காலம் காலநீட்டிப்பு செய்து, ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்ட வழிகாட்டுதல்களில் எவ்வித மாற்றமும் இல்லாமல் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு கட்டப்பட்டுள்ள அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்கள் மலையிட பகுதியில் அமையும்பட்சத்தில் 18.2.2020ல் குறிப்பிடப்பட்டுள்ள அரசு கடிதத்தில் அனைத்து வழிமுறைகளை பின்பற்ற தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.tcponline.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.