செங்கல்பட்டு: கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: செங்கல்பட்டு மாவட்டத்தில் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களுக்கு சிறப்பு சுய உதவிக் குழுவை உருவாக்கும் புதிய திட்டமான, ‘விடியல்’ திட்டத்தை செயல்படுத்தும் வகையில், கொத்தடிமை தொழிலாளர்கள் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களை முழுமையாக மேம்படுத்த சிறப்பு சுய உதவி குழுக்களை உருவாக்கி, அவர்களின் வாழ்வாதார மேம்படுத்த மாவட்ட அளவிலான திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் தொகுதி அளவிலான ஒருங்கிணைப்பாளர் நியமனம் செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கான தகுதிகள் பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது. அடிதட்டு மட்டத்திலுள்ள சமூகத்திற்கு குறைந்தபட்சம் 3 முதல் 5 வருடங்கள் வரையில் பணியாற்றிய அனுபவம் பெற்ற பட்டதாரியாக அல்லது MSW முடித்தவராக இருக்க வேண்டும். மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மற்றும் சமூகம் தொடர்பான நல்ல தகவல் தொடர்பு மற்றும் விளக்கக்காட்சி திறன் பெற்றவராக இருக்க வேண்டும். செங்கல்பட்டு மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவராக இருக்க வேண்டும். இரு சக்கர வாகனத்துடன் முறையாக ஓட்டுநர் உரிமம் பெற்றவராக இருக்க வேண்டும்.
தொகுதி அளவிலான ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கான தகுதிகள் பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி 8 முதல் 10ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். அல்லது நலிவுற்ற குடும்பத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்ப படிவம் 25.8.2023 தேதிக்குள் செங்கல்பட்டு மகளிர் திட்ட அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.