சென்னை: தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு ஜூலை 10 முதல் 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத் துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசுத் தேர்வுத் துறை இயக்குநரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆகஸ்ட் 18 முதல் 22ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்கள் ஜூலை 10 முதல் 17ம் தேதி வரை தேர்வுத்துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) குறிப்பிடப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையவழியில் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், தேர்வுக் கட்டணம் ரூ.125, இணையவழி பதிவுக் கட்டணம் ரூ.70 என மொத்தம் ரூ.195 பணமாக சேவை மையங்களில் நேரடியாக செலுத்த வேண்டும்.
இதில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் தட்கல் முறையில் ஜூலை 18, 19ம் தேதிகளில் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு தேர்வுக் கட்டணத்துடன் ரூ.500 கூடுதலாக செலுத்த வேண்டும். முதன்முதலாக தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள் பள்ளி பதிவுத்தாள் நகல், சான்றிடப்பட்ட பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், பிறப்புச் சான்றிதழ் நகல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.