புதுடெல்லி: காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கை அவசரமாக பட்டியலிட்டு விசாரித்து உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று முறைப்படி முறையிட உள்ளது.கர்நாடக அரசு கடந்த ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி வரை காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய 51 டி.எம்.சி நீரில் 15 டி.எம்.சி மட்டுமே தந்திருப்பதால் எஞ்சியுள்ள 38 டி.எம்.சி நீரை உடனடியாக திறக்க உத்தரவிட வேண்டுமென டெல்லியில் சமீபத்தில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் வினாடிக்கு 10,000 கன அடி வீதம் 15 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்க கர்நாடகத்திற்கு மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு திறந்து விட வேண்டிய நீரில் சுமார் 29 டி.எம்.சி தண்ணீரை இன்னும் திறந்து விட வேண்டும். அதேபோல ஆகஸ்டு மாதத்தில் கர்நாடகம் 45 டி.எம்.சி நீர் தர வேண்டும். காவிரி டெல்டா பாசன பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்களை காப்பாற்ற உடனடியாக வினாடிக்கு 24,000 கனஅடி வீதம் தண்ணீர் இந்த மாதம் முழுவதும் காவிரியில் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதேபோன்று செப்டம்பர் மாதம் திறக்க வேண்டிய 36.76 டி.எம்.சி நீரையும் காலதாமதமில்லாமல் உரிய நேரத்தில் திறந்து விடவும் கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும்.
மேலும், காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் உரிய நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி இருந்தது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி மற்றும் குமணன் ஆகியோர் கடந்த 18ம் தேதி முறையிட்டனர். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி, இந்த விவகாரத்தை விசாரிக்க புதிய நீதிபதி அமர்வை நியமிக்க வேண்டுமென்பதால், 21ம் தேதி முறைப்படி முறையிடுமாறு உத்தரவிட்டார். அதன்படி, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் இன்று முறைப்படி முறையிடப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து, இந்த வழக்கு எப்போது, எந்த அமர்வில் விசாரணைக்கு வரும் என்பது அறிவிக்கப்படும்.