நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த கூலி தொழிலாளி முனியாண்டி. இவரது மகன் சின்னத்துரை (20). இவர் கடந்த 2023ம் ஆண்டு அரசு பள்ளியில் படித்து வந்த போது வேறு சமுதாய மாணவர்களுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அதே பள்ளியை ேசர்ந்த மாணவர்கள் சிலர், அவரை அரிவாளால் வெட்டினர். இதை தடுக்க முயன்ற தங்கைக்கும் வெட்டு காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைதொடர்ந்து அவர் குணமடைந்ததும். அவருக்கு அரசு சார்பில் நெல்லை ரெட்டியார்பட்டியில் வீடு வழங்கப்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது பிளஸ்2 தேர்வில் தேர்ச்சி பெற்றார். இதன்பின்னர் பாளையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் கல்லூரியில் 2வது ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் சின்னதுரைக்கு கிரிண்டர் செயலி மூலம் மர்ம நபர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் நேற்று சின்னத்துரையை தொடர்பு கொண்டு மாவட்ட அறிவியல் மையம் அருகே உள்ள வசந்தா நகருக்கு வரவழைத்தனர். சின்னத்துரை அங்கு வந்ததும் பதுங்கி இருந்து மர்ம நபர்கள் அவரை தாக்கினர். இதனால் அவருக்கு ஏற்கனவே காயம் ஏற்பட்ட கையில் மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் வினோத் சாந்தாராம் நேரில் விசாரணை நடத்தினர். சின்னத்துரையை தாக்கிய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.