சென்னை: சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நேற்று முன் தினம் மாலை மின்னஞ்சல் ஒன்று வந்தது. அந்த மின்னஞ்சலை பல்கலைக்கழக ஊழியர்கள் பார்த்த போது, ‘இன்னனும் சற்று நேரத்தில் வெடி குண்டு வெடித்து சிதறும்’ என்று ஆங்கிலத்தில் குறிப்படப்பட்டிருந்தது. இதனால், அச்சமடைந்த ஊழியர்கள் இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர். உடனே சம்பவம் குறித்து கோட்டூர்புரம் போலீசாருக்கு பல்கலைக்கழகம் சார்பில் தகவல் அளிக்கப்பட்டது.
அதன்படி வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் பல்கலைக்கழக வளாகம் மற்றும் மாணவ, மாணவிகள் விடுதிகள் என அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை. இதையடுத்து, இது வெறும் புரளி என தெரியவந்தது. அதைதொடர்ந்து கோட்டூர்புரம் போலீசார் மிரட்டல் வந்த மின்னஞ்சல் முகவரியை பெற்று ஆய்வு செய்த போது, அது வெளிநாடுகளில் இருந்து வந்தது என தெரியவந்தது. அதைதொட்ர்ந்து போலீசார் சைபர் க்ரைம் உதவியுடன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.